அல்லாஹ் ஏன் இஸ்மாயீலையும் மக்காவையும் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்?

இஸ்லாமியர்களின் புனித பூமி மக்கா நகரம். முதன் முதலாக ஆதாம் ’அல்லாஹ்வை’ தொழுதுக்கொண்ட இடம் காபா என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆபிரகாமையும், ஆகாரையும், கைக்குழந்தை இஸ்மாயீலையும், கிட்டத்தட்ட 1500 கிலோ மீட்டார்கள் தூரம் பிரயாணம் செய்யச் செய்து[1], மக்காவிற்கு அல்லாஹ் அழைத்து வந்தாராம். சில வருடங்கள் கழித்து, ஆபிரகாமும், இஸ்மாயீலும் காபாவை கட்டி எழுப்பினார்களாம். அதன் பிறகு இஸ்மாயீல் ஒரு நபியாக மக்காவில் இறைப்பணி செய்தாராம். இந்த இஸ்மாயீலின் சந்ததியில் தான் முஹம்மது வந்தார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்[2].  இந்த மக்காவில் உள்ள காபாவை நோக்கித் தான் முஸ்லிம்கள் 1400 ஆண்டுகளாக ஐவேளையும் அல்லாஹ்வை தொழுதுக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மக்காவையும், காபாவையும், இஸ்மாயீலையும் அல்லாஹ் 2500 ஆண்டுகள் மறந்துவிட்டார் என்றுச் சொன்னால், நம்பமுடிகின்றதா உங்களால்? நம்பாமல் என்ன செய்யமுடியும்? குர்-ஆனே சொன்ன பிறகு அதனை முஸ்லிம்களால் மறுக்க முடியுமா?

இதனை புரிந்துக்கொள்ள கீழ்கண்ட படத்தை பார்க்கவும். படத்தின் கீழே விளக்கம் தரப்பட்டுள்ளது.

படம் 1: 2500 ஆண்டுகள் அல்லாஹ் மக்காவை மறந்தது ஏன்?

மேலேயுள்ள படத்தின் விளக்கம்:

முதல் மனிதன் ஆதாம் தொடங்கி நோவா வரையுள்ள காலவரிசையை சரியாக கணிக்கமுடியாது. ஆனால், ஆபிரகாம் காலத்தை ஓரள்விற்கு கணக்கிடலாம். இந்த  ஆபிரகாம் என்பவரிடமிருந்து தான், நம் கதை தொடங்குகிறது, இன்றுள்ள தலைவலிக்கு வித்து அவரிடமிருந்து தான் ஆரம்பிக்கிறது. ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள், இஸ்மாயீல் மற்றும் ஈசாக்கு. ஈசாக்கு இறைவனின் வாக்கின்படி  ஆபிரகாமுக்கும் முதல் மனைவி சாராளுக்கும் பிறந்தவர் (முதல் மனைவி என்று சொல்லும் போதே  உங்களுக்கு புரிந்திருக்குமே! இரண்டாம் மனைவியும் இக்கதையில் உண்டு என்று!). இறைவனின் வாக்கு நிறைவேறும்வரை காத்திராமல், சாராள் அவசரப்பட்டு, தன் அடிமை பெண்ணை ஆபிரகாமின் கட்டிலுக்கு அனுப்பினாள், தன் மடியில் தன் கையாலேயே நெருப்பை அள்ளி போட்டுக்கொண்டாள். அடிமைப்பெண் ஆகாருக்கும், ஆபிரகாமுக்கும் பிறந்தவர் இஸ்மாயீல். இதன் பிறகு தான் இறைவனின் வாக்கின்படி, சாராளுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் தான் ஈசாக்கு. இறைவன் முந்தியிருக்கவேண்டும், அல்லது சாராள் பிந்தியிருக்கவேண்டும்.

ஆபிரகாமின் காலம் தோராயமாக கி.மு. 2000 என்றுச் சொல்லலாம். அதாவது இன்றிலிருந்து கணக்கிட்டால், கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் முந்தையது, ஆபிரகாமின் கதை. இஸ்லாமின் படி, ஆபிரகாம் அல்லாஹ்வின் ஆணைப்படி, ஆகாரையும் (சாராளின் அடிமைப்பெண்), மகன் இஸ்மாயீலையும், அழைத்துக்கொண்டு பல நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் மக்காவிற்குச் சென்றாராம். அங்கு அந்த குழந்தையையும், ஆகாரையும் விட்டுவிட்டு வந்துவிட்டாராம், அதாவது தன் முதல் மனைவி சாராள் மற்றும் மகன் ஈசாக்கு வாழும் இடத்திற்கே வந்துவிட்டாராம். பல ஆண்டுகள் கழித்து, மறுபடியும் இஸ்மாயீலை பார்க்க ஆபிரகாம் பல நூறு மைல்கள் கடந்துச் சென்றாராம். அப்போது தான் ‘காபாவை’ பழுது பார்த்து கட்டினார்களாம்.

  • ஒரு அப்பா (ஆபிரகாம்),
  • இரண்டு மனைவிகள் (சாராள் & ஆகார்),
  • இரண்டு மகன்கள் (இஸ்மாயீல் & ஈசாக்கு),
  • இரண்டு பட்டணங்கள் (ஜெருசலேம் & மக்கா),
  • இரண்டு எதிர் துருவங்கள் (கிறிஸ்தவம் & இஸ்லாம்).

அல்லாஹ் தன் இறைத்தூதர் இஸ்மாயீலை மக்காவில் ஊழியம் செய்ய நியமித்தாராம். ஈசாக்கு இஸ்ரேலில் பகுதியில் ஊழியத்தில் ஈடுபட்டாராம். இங்கு ஊழியம் என்றுச் சொன்னால், அல்லாஹ்வின் வழியில் மக்களை வழிநடத்தும் படி போதனை செய்வது. இதன் பிறகு என்ன நடந்தது? அல்லாஹ் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்கை மறந்துவிட்டான், மக்காவையும், காபாவையும் மறந்துவிட்டான், இஸ்மாயீலையும் மறந்துவிட்டான். எத்தனை ஆண்டுகள் இப்படி மறந்தான்? கிட்டத்தட்ட 2500 ஆண்டுகள் மறந்தான். 

ஆதாம் தன்னை முதன் முதலாக வணங்கிய இடம் காபா தான் என்று பெருமையாக பேசும் அல்லாஹ், அதனை 2500 ஆண்டுகள் கைகழுவிவிட்டான். ஆனால், ஈசாக்கை அல்லாஹ் கைவிடவில்லை, அவர் சந்ததியை கைவிடவில்லை. கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள், இயேசுக் கிறிஸ்துவரை, ஒருவருக்கு பின்னால் இன்னொருவர் என்று பல தீர்க்கதரிசிகளை (நபிகளை) அனுப்பிக்கொண்டு, அவர்களை வழிநடத்திக்கொண்டு வந்தான். அற்புதங்கள் அனைத்தும் இந்த ஈசாக்கு சந்ததியிலேயே அல்லாஹ் செய்து காட்டினான். குர்-ஆனில் நாம் பார்த்தால், ஆபிரகாமின் மகன் ஈசாக்கு பற்றியும், அவரது சந்ததிகளாகிய யாக்கோபு, யோசேப்பு மற்றும் அவர்களின் 12 வம்சங்கள் பற்றித் தான் அல்லாஹ் ஓயாமல் குர்-ஆனில் பேசியுள்ளான். யூதர்களை பாதுகாக்கவும், வழி நடத்தவும், அவர்கள் தவறு செய்தால், தண்டித்து மறுபடியும் சேர்த்துக்கொள்ளவுமே தன் முழு வாழ்நாட்களையும் (2000 ஆண்டுகள்) அல்லாஹ் செலவிட்டுள்ளான்.

குர்-ஆனின்படி, மிகப்பெரிய தீர்க்கதரிசிகள் அனைவரும் ஈசாக்கு சந்ததியில் வந்தவர்கள் தான், உதாரணத்திற்கு, மோசே, ஆரோன், தாவீது, சாலொமோன், இயேசுக் கிறிஸ்துவரை அனைவரும் ஈசாக்கு வம்சமே! இஸ்மாயீல் என்னவானார்? அவர் வழிநடத்திய மக்கள், மற்றும் மக்கா (காபா) நிலப்பரப்பில் வாழும் மக்களின் நிலை என்ன? அல்லாஹ்விற்கு அக்கரையில்லை, அது அவருக்கு தேவை என்று அவர் நினைக்கவில்லை. புதிய ஏற்பாட்டின் காலத்திலும், இயேசுவின் தாய் மரியாள், யோவான் ஸ்நானகன், இயேசு என்று இவர்கள் பற்றித்தான் பேச்சு அல்லாஹ்விற்கு. இஸ்மாயீலின் சந்ததிகளை சந்தையில் கூறுபோட்டு விற்றுவிட்டார் அல்லாஹ்.

மேலேயுள்ள படத்தில், குர்-ஆனில் வரும் தீர்க்கதரிசிகளின் பெயர்களை மட்டுமே நான் குறிப்பிட்டுள்ளேன். பைபிளின் படி, இன்னும் பல தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள், அவர்களை இங்கு நான் சேர்க்கவில்லை என்பதை கவனிக்கவும். இஸ்மாயீலின் சந்ததிகளில் ஒரு நபியையும் 2500 ஆண்டுகளாக அல்லாஹ் அனுப்பவில்லை. ஆனால், ஈசாக்கு வம்சத்தில் இயேசுக் கிறிஸ்துவரை அனேக நபிகளை யூதர்களை வழிநடத்த அல்லாஹ் அனுப்பினான். அல்லாஹ்விற்கு ஏன் இந்த பாரபட்சம்? அல்லாஹ் அனுப்பிய கடைசி யூத நபி இயேசுக் கிறிஸ்து ஆவார். இஸ்மாயீலின் சந்ததியில் கி.பி. 610 வரை முதல் மற்றும் கடைசி நபி இஸ்மாயீல் தான். அல்லாஹ் என்ன நினைத்தானோ தெரியவில்லை, 2500 ஆண்டுகள் கழித்து, ”அடடே நம்மை முதன் முதலில் ஆதாம் தொழுதுக்கொண்ட மக்காவையும், காபாவையும் நாம் மறந்துவிட்டோமே” என்று எண்ணி, கி.பி. 610ல் மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருந்த, முஹம்மது என்பவரை தன் நபியாக தெரிவு செய்தான். குர்-ஆனின் படி, மக்கா மக்களுக்காக அனுப்பப்பட்ட முதல் நபி இஸ்மாயீல், கடைசி நபி  முஹம்மது. இதுமட்டுமல்ல, உலகத்துக்கே கடைசி நபியாக முஹம்மதுவை அல்லாஹ் அனுப்பினானாம். 

கேள்விகள்: சில கேள்விகள் நமக்கு இப்போது எழுகின்றன.

1) ஏன் அல்லாஹ் மக்காவையும், காபாவையும், இஸ்மாயீலையும் ~2500 ஆண்டுகள் மறந்துவிட்டான்? (ஆபிரகாம் - கி.மு. 2000 ஆண்டிலிருந்து, முஹம்மது கி.பி. 610 வரை)

2) மேலேயுள்ள படத்தில் பார்க்கவும், இஸ்மாயீலுக்கும், முஹம்மதுவிற்கும் இடையே ஒரு நபியும் இல்லை. ஆனால், ஈசாக்கின் பக்கம் பார்த்தால், அனேக நபிகள் உள்ளனர். ஏன் இந்த பாகுபாடு? (மேலேயுள்ள படத்தில் பல யூத நபிகளின் பெயர்களை நான் குறிப்பிடவில்லை.)

3) யூதர்களுக்கு வழி காட்டியது போல, இஸ்மாயீலின் சந்ததிக்கும் வழி காட்டவேண்டியது அல்லாஹ்வின் கடமையல்லவா? வெறும் இஸ்மாயீல் மட்டுமே முக்கியமில்லை, அவருடைய சந்ததியும் முக்கியமே! ஈசாக்கை மட்டும் அல்லாஹ் ஆசீர்வதிக்கவில்லை, அவருடைய பல ஆயிர சந்ததிகளையும் ஆசீர்வதித்தார். 

4) ஒருவேளை, சாராள் ஆபிரகாமின் முதல் மனைவி என்பதாலும், ஆகார் சாராளின் வேலைக்காரி மற்றும் அடிமை! என்பதால் அவளுடைய சந்ததிக்கு என்ன மதிப்பு இருக்கிறது என்ற எண்ணமா அல்லாஹ்விற்கு? 

5) 2500 ஆண்டுகள் அல்லாஹ்வால் மறக்கப்படுதல் என்பது, தெரியாமல் நடந்த பிசகு அல்ல.

6) உலகில் உள்ள எல்லா மக்களுக்கும் (சமுதாயங்களுக்கும்) நபிகளை அனுப்பாமல் இருக்கவில்லை என்றுச் சொல்லும் அல்லாஹ், ஏன் இஸ்மாயீலுக்கு பிறகு, அம்மக்களை அம்போ என்று அனாதைகளாக விட்டுவிட்டார்?

7) இஸ்மாயீல் முஹம்மதுவைப் போல ஒரு புத்தகத்தை கொண்டு வந்து, மக்களுக்கு கொடுத்து இருந்திருந்தாலும் ஒருவகையாக ஒப்புக்கொள்ளலாம். அல்லாஹ்வின் வார்த்தையாகிய வேதம் இருக்கிறது, அது அம்மக்களை 2500 ஆண்டுகள் வழிநடத்தும் என்றுச் சொல்லலாம். ஆனால், அக்காலத்தில் மொழிகளும் எழுத்துக்களும் சிறந்த நிலையில் இல்லை, முக்கியமாக அரபி எழுத்துக்களின் நிலை சிறப்பான ஒன்றாக இல்லை. குர்-ஆன் 34:44ன் படி, அல்லாஹ் அரபியர்களுக்கு முஹம்மதுவின் காலம் வரை ஒரு வேதத்தையும் இறக்கவில்லையாம் - பார்க்க குர்-ஆன் 34:44. எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.

8) ஆனால், ஈசாக்கின் சந்ததிகளுக்கு மட்டும், மோசே என்ற மிகப்பெரிய நபியை அனுப்பினார், தோரா என்றுச் சொல்லக்கூடிய ஐந்தாகமங்களை கொடுத்தார். தாவீது மூலமாக ஜபூரைக் கொடுத்தார். இந்த புத்தகம் இறைவனை துதித்துப் பாடுவதற்காக கொடுக்கப்பட்டது. யூதர்கள் தன்னை துதித்து பாட இறைவேதத்தை கொடுத்த அல்லாஹ், மக்காவின் மக்களை நல்வழிப்படுத்த ஒரு நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு வேதத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை. மக்காவின் மீது என்னே ஒரு அன்பு அல்லாஹ்விற்கு! மக்காவில் மக்களை வழிநடத்த ஒரு நபி இல்லை, ஒரு நாதியும் இல்லை, ஒரு வேதமுமில்லை, ஆனால், எருசலேமில் மட்டும் நபிக்கு மேல் நபிகள், வேதங்களுக்கு மேல் வேதங்களை கொடுத்துக்கோண்டே இருந்தான் அல்லாஹ். கடைசியாக, இயேசுவிற்கு இன்ஜில் என்ற புத்தகம் கூட கொடுத்தான். என்னதான் நினைத்துக்கொண்டு இருக்கிறான் அல்லாஹ்? 

9) இஸ்மாயீல் என்ன மாற்றான் தாய் பிள்ளையா? ஒருவேளை, ஆகார் ஒரு அடிமைப்பெண், வேலைக்காரி என்றுச் சொன்னாலும், இஸ்மாயீலின் தந்தை யார்? ஆபிரகாம் அல்லவா? இவர் அல்லாஹ்வின் நண்பன் அல்லவா? இப்படியா! தன் நண்பனின் பிள்ளைகளை, வம்சங்களை நடுத்தெருவில் அனாதைகளாக விட்டுவிடுவது?

10) மக்காவில் இறைச்செய்தி சொல்ல 2500 ஆண்டுகள், ஒரு ஈயையும் அனுப்பாத அல்லாஹ் இஸ்ரேலர்களுக்கு மட்டும் தேனீக்களைப்போல நபிகளின் பட்டாளங்களை அனுப்பினார். இஸ்ரேலில் எங்கு தடுக்கி விழுந்தாலும் ஒரு நபி/திர்க்கதரிசி இருப்பார். சில வேளைகளில், ஒரே இடத்திற்கு இரண்டு மூன்று நபிகளையும் அனுப்பியுள்ளார் (பை ஒன், கெட் ஒன் ஆஃப்ஃபர்). எருசலேமிலிருந்து மக்காவிற்கு போய் இறைச்செய்தியைச் சொல்லுங்கள் என்று ஒருவரை அனுப்பியிருக்கலாம் அல்லவா? அல்லாஹ் அனுப்பினால், மாட்டேன் என்றா நபிகள் சொல்வார்கள்? அப்படி சொன்னாலும், அல்லாஹ் விட்டுவிடுவானா என்ன! மீனை அனுப்பி அந்த நபியை வழிக்கு கொண்டுவரமாட்டான்?

11) அல்லாஹ்விற்கு நினிவே மக்கள் மீது இருந்த அன்பு அக்கரை கூட மக்கா மீது, காபா மீது, இஸ்மாயீலின் சந்ததிகள் மீது இல்லை.

12) ஹூத், ஸாலிஹ் மற்றும் ஷூஐப் போன்றவர்கள் ஆபிரகாமுக்கு முன்பாக வந்த நபிகள் என்று முஸ்லிம்கள் சொல்கிறார்கள். இவர்கள் இஸ்மாயீலின் சந்ததிகள் அல்ல.

13) மனித இனத்திற்கு முஹம்மதுவரை 124000 நபிகளை அனுப்பியதாக இஸ்லாமிய பாரம்பரியங்கள் சொல்கின்றன. இவர்களில் மக்காவிற்கு மட்டும் இருவர் (இஸ்மாயீல் மற்றும் முஹம்மது) தானா? இது அநியாயம் இல்லையா? சரியான ஊட்டச்சத்து இல்லாமல், நோய்வாய்ப்பட்டு ஒல்லியாக இருக்கும் பையனைப்போல உலக வரைபடத்தில் காணப்படும் இஸ்ரேல் நாட்டிற்கு பலபேரை அனுப்பினான் அல்லாஹ்! ஆனால், பல பாட்டில்கள் ஹார்லிக்ஸும், காம்பிளானும் குடித்துவிட்டு, புஷ்டியாக காணப்படும் அரேபிய தீபகர்ப்பத்திற்கு மட்டும் நபிகளை அனுப்பாமல், அதனை காயவைத்தது மிகப்பெரிய மன்னிக்கமுடியாத தவறு இல்லையா! முஸ்லிம்களுக்கு அல்லாஹ் இழைத்த மிகப்பெரிய துரோகம் இது அல்லவா?

நபிகள் பற்றிய அல்லாஹ்வின் கோட்பாடுகள்: 

ஒவ்வொரு சமுதாயத்துக்கு அல்லாஹ் அனுப்பிய நபிகள் உண்டு:

35:24. நிச்சயமாக நாம் உம்மை உண்மையைக் கொண்டு, நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்; அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வராத எந்த சமுதாயத்தவரும் (பூமியில்) இல்லை.

10:47. ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

இஸ்மாயீலின் சந்ததிகளுக்கு, அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள் என்றுச் சொல்லக்கூடிய நபர் ஒருவர் கூட 2500 ஆண்டுகளாக இல்லை.

16:36. மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; . . . 

முஹம்மதுவிற்கு முன்பு அனுப்பப்பட்ட சில நபிகள் பற்றி தான் அல்லாஹ் குர்-ஆனில் கூறுகின்றான். அவன் அனுப்பிய அனேகரின் பெயர்களை அல்லாஹ் குர்-ஆனில் கூறவில்லை. ஆனால், இஸ்மாயீலிலிருந்து முஹம்மதுவரை ஒருவரையும் அல்லாஹ் அனுப்பவில்லை.

40:78. திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்; . . . .  

இஸ்மாயீல் ஒரு நபியில்லையா? மக்காவிற்கு ஒரு நபியையும் அனுப்பவில்லையா! அல்லாஹ்?

இதுவரை பார்த்த விவரங்கள் ஒருவகையென்றால், அடுத்து நாம் பார்க்கப்போகும் குர்-ஆன் வசனங்கள் வேறு வகையாகும். அதாவது, ”இஸ்மாயீல் ஒரு நபி” என்று இதுவரை இக்கட்டுரையில் எழுதி வந்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், கீழ்கண்ட குர்-ஆன் வசனங்கள் ஒரே அடியாக பெரிய குண்டை எடுத்து போடுகின்றன. அதாவது, மக்காவிற்கு, நான் ஒரு நபியைக்கூட அனுப்பவில்லை, எச்சரிக்கை செய்பவர் ஒருவரையும் அனுப்பவில்லை, அவ்வளவு ஏன், வேதத்தையும் அனுப்பவில்லையென்று அல்லாஹ் சொல்கிறான். அதனால் தான் கடைசியாக முஹம்மதுவை அனுப்பியிருக்கிறேன் என்று அல்லாஹ் சொல்கிறான்.

32:3. . . . எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).

34:44. எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.

28:46. . . . எனினும் எந்த மக்களுக்கு, உமக்கு முன்னால் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் அனுப்பப்படவில்லையோ, அவர்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காக உமக்கு உம் இறைவனிடமிருந்து அருட்கொடையாக (இவைக் கூறப்படுகிறது).

36:6. எந்த சமூகத்தினரின் மூதாதையர்கள், எச்சரிக்கப்படாமையினால் இவர்கள் (நேர்வழி பற்றி) அலட்சியமாக இருக்கின்றார்களோ இ(த்தகைய)வர்களை நீர் எச்சரிப்பதற்காக.

இவைகளின் படி, மக்காவிற்கு எச்சரிக்கை செய்ய வந்த முதல் மற்றும் கடைசி நபி ‘முஹம்மது’ ஆவார். அப்படியானால், இஸ்மாயீல் நபி இல்லையா? அவர் மக்கா இருந்த பகுதியில் அல்லாஹ் பற்றி எச்சரிக்கை செய்யவில்லையா? இஸ்மாயீல் நபி இல்லை என்றுச் சொன்னால், மக்காவை, காபாவை அல்லாஹ் 2500 ஆண்டுகள் மறக்கவில்லை, இன்னும் பல ஆயிர ஆண்டுகள் (குறைந்த பட்சம் 4000 ஆண்டுகள் - ஆதாம் முதல் முஹம்மதுவரை) மறந்துள்ளார். தோண்டத்தோட்ண்டடு குர்-ஆனிலிருந்து பல புதையல்கள் வெளிப்படுகின்றது. 

இக்கட்டுரையில் முஹம்மது ஜான் குர்-ஆன் தமிழாக்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புக்கள்:

[1] எருசலேமிலிருந்து மக்கா வரை கூகுளில் தூரத்தை கணக்கிட்டால், 1483 கிலோ மீட்டர்கள் வருகின்றது. காரில் சாலையில் பிரயானம் செய்தால் இந்த கணக்கு. 4000 ஆண்டுகளுக்கு முன்பு, காடுமேடுகளைத் தாண்டி, பிரயாணம் செய்தால், இன்னும் தூரம் அதிகமாகும். 

[2] ஆபிரகாம் மக்காவிற்கு கி.மு. 2000 காலகட்டத்தில் சென்றார் என்பதற்கு எந்த ஒரு  சரித்திர ஆதாரமும் இல்லை.


இதர தலைப்புக் கட்டுரைகள்

உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்