2013 கிறிஸ்துமஸ் - பாகம் 1:

இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (Santa Claus – கிறிஸ்மஸ் தாத்தா) யார்?

[முன்னுரை: உமரின் தம்பி "அப்துல்லாஹ்" சௌதியில் வேலை செய்கிறார். அவர் இஸ்லாமை தழுவியுள்ளார். இவருக்கும் உமருக்கும் இடையே அவ்வப்போது இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றிய உரையாடல்கள், விவாதங்கள் நடப்பதுண்டு. இவ்வாண்டு கிறிஸ்துமஸ்ஸை முன்னிட்டு, அப்துல்லாஹ், உமரிடம் புரிந்த உரையாடல்களை தொடர் கட்டுரைகளாக காண்போம்.]

2013 கிறிஸ்துமஸ் பாகம் 1: 
இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (Santa Claus – கிறிஸ்மஸ் தாத்தா) யார்?

[உமரின் தம்பி அப்துல்லாஹ், உமருக்கு தொலைபேசியில் அழைத்து பேசுகிறார்]

உமர்: ஹலோ அப்துல்லாஹ்!

அப்துல்லாஹ்: அஸ்ஸலாம் அலைக்கும் அண்ணா.

உமர்: வஅலைக்கும் ஸலாம், தம்பி.

அப்துல்லாஹ்: நான் நன்றாக இருக்கிறேன், நீங்க எப்படி இருக்கீங்க?

உமர்: கர்த்தரின் கிருபையால், நான் நன்றாக இருக்கிறேன். நீ எந்த காரணமும் இல்லாமல் என்னை அழைக்கமாட்டாயே! என்ன விஷயம் சொல்லு?

அப்துல்லாஹ்: ஆமாம் அண்ணா, ஒரு முக்கியமான விஷயத்திற்காகத் தான் உங்களை அழைத்தேன். இது டிசம்பர் மாதம் மற்றும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது அல்லவா!

உமர்: அட, கிறிஸ்துமஸ்ஸும் உனக்கு ஞாபகம் இருக்கிறதா! ஆச்சரியமாக இருக்கே! 

அப்துல்லாஹ்: அண்ணே, கிறிஸ்தவர்களின் அனைத்து பண்டிகைகளைக் குறித்து நாங்க தான் அதிகம் பேசுகிறோம், ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறோம் தெரியுமா? சரி விஷயத்துக்கு வருகிறேன். நான் இயேசுவின் பிறப்பு பற்றிய குர்ஆன் வசனங்களை சில நாட்களாக ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாண்டு, இந்த கிறிஸ்துமஸ் மாதத்தில், உங்களுடன் இயேசுவின் பிறப்பு பற்றி விவாதிக்கலாம் என்று விரும்புகிறேன். நீங்க "ஸ்கைப்பில்(Skype)" வரமுடியுமா? நாம் பேசலாம்.

உமர்: வாவ்... நல்ல விஷயம் தான். நாம் தொலைபேசியிலேயே பேசலாமே!

அப்துல்லாஹ்: இல்லை.. இல்லை.. குர்-ஆன் வசனங்களை நான் மேற்க்கோள் காட்டும் போது,  அவைகளை  பேஸ்ட் செய்ய உதவியாக இருக்கும். எனவே, ஸ்கைப்பில் வாருங்கள்.

உமர்: ஓகே, நான் இன்று மாலை வீட்டிற்கு வந்தவுடன், உன் மொபைலில் அழைப்பேன், அப்போது நீ ஸ்கைப்பில் லாகின் ஆகிவிடு, நாம் பேசுவோம்.

அப்துல்லாஹ்: அண்ணே! இந்த முறை குர்ஆன் வசனங்களை வைத்துக்கொண்டு, இயேசுவின் பிறப்பு பற்றி குர்ஆன் சொல்வது தான் சரியானது, பைபிள் சொல்வது தவறானது என்பதை நான் நிருபிக்கப்போகிறேன். உங்களுக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள், உங்களை நோக்கி கிறிஸ்மஸ் வெடிகள் வருகின்றன.

உமர்: ஓ.. எனக்கு பயமாக இருக்கிறே! 

தம்பி, பார்த்து வெடி வைக்கவேண்டும், கிறிஸ்மஸ் ராக்கெட்டு விடும் போது, உன்னை நோக்கியே அது திரும்பி வராமல் பார்த்துக்கொள்.

அப்துல்லாஹ்: பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா! இன்று மாலை சந்திப்போம்.

உமர்: உனக்கும் நல்வாழ்த்துக்கள் தம்பி.

[அன்று மாலை இருவரும் ஸ்கைப்பில் லாகின் ஆகிறார்கள், உரையாடல் தொடர்கிறது.]

உமர்: தம்பி, இந்த நாள் எப்படிச் சென்றது?

அப்துல்லாஹ்: நன்றாக இருந்தது அண்ணா. உங்களுக்கு எப்படி?

உமர்: சிறிது டென்ஷனாக இருந்தது.

அப்துல்லாஹ்: எதைப் பற்றி டென்ஷன்? என்னோடு உரையாடப்போவது பற்றிய  டென்ஷனா?

உமர்: தம்பி, ஆபிஸில் கொஞ்சம் வேலை அதிகமாக இருந்தது.  

சரி, நான் தயாராக இருக்கிறேன், உன் கேள்விகளை நீ கேட்கலாம்.

அப்துல்லாஹ்: என்னுடைய முதலாவது கேள்வி பொதுவான கேள்வியாகும். நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, கிறிஸ்மஸ் என்றாலே முதலில் நம் ஞாபகத்தில் வருபவர் குழந்தை இயேசு, இரண்டாவதாக  "கிறிஸ்துமஸ் தாத்தா அல்லது சாண்டா கிளாஸ்" ஞாபகத்தில் வருவார். பைபிளில் சொல்லாத இந்த தாத்தா எப்படி கிறிஸ்துமஸ்ஸில் வந்தார்? இப்படியெல்லாம் செய்யும் படி இயேசு சொல்லியுள்ளாரா? இது கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமானது அல்லவா? பைபிள் இதனை அங்கீகரிக்குமா?  இவைகளுக்கு பதிலைச் சொல்லுங்கள், அதன் பிறகு குர்-ஆனில் எப்படி இயேசுவின் பிறப்பு பற்றிய உண்மைகள் சொல்லப்பட்டுள்ளது என்று நான் விளக்குகிறேன்.

உமர்: ம்ம்ம்…. உன்னுடைய முதலாவது வெடி கிறிஸ்மஸ் தாத்தாவை நோக்கி வீசுப்படுகின்றதா? தம்பி நன்றாக கவனி. பைபிள் கிறிஸ்மஸ்ஸை கொண்டாடச் சொல்லவில்லை. ஆனால், ஒரு நாளை விசேஷமானதாக மாற்றிக்கொள்ள நமக்கு பைபிள் அனுமதி கொடுத்துள்ளது. அதாவது நம்முடைய பிறந்த நாளை முன்னிட்டு, மகிழ்ச்சியாக இருக்கவும், நண்பர்கள், உறவினர்களோடு மகிழ்ச்சியாக இருக்கவும் நமக்கு அனுமதி உண்டு. 

இதே போல, நமக்காக பரலோகத்திலிருந்து இறங்கி வந்த இயேசுவின் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடுவதில் எந்த ஒரு தீமையும் இல்லை. இயேசு பிறந்த நாள் டிசம்பர் 25ம் தேதி தான் என்று நாம் துள்ளியமாகச் சொல்லமுடியாது. இருந்தபோதிலும், ஒரு நாளை விசேஷமாக ஒதுக்கி, அதில் மகிழ்ச்சியாக இருப்பது தவறில்லை. 

அடுத்தபடியாக, கிறிஸ்மஸ் தாத்தாவைப் பற்றி கேட்டாய். இவரைப் பற்றியும் பைபிளில் சொல்லப்படவில்லை, இவர் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பாத்திரம். இதனால் எந்த ஒரு தீமையுமில்லை. மேலும் கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், இந்த கிறிஸ்மஸ் தாத்தா என்பது ஒரு கற்பனை கதாப்பாத்திரம் என்று நன்றாகத் தெரியும். பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்ற காரணத்தினால், பெற்றோர்களும் கிறிஸ்மஸ் தாத்தா என்ற கற்பனை பாத்திரத்தை அனுமதிக்கிறார்கள். இதே பிள்ளைகள் பெரியவர்களாகும் போது, கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய உண்மை நிலையை தெரிந்துக்கொள்வார்கள், நாம் எப்படி தெரிந்துக்கொண்டோமோ அது போல.

எனவே, கிறிஸ்துமஸ்ஸை 25ம் தேதி கொண்டாடுவதோ, அல்லது கிறிஸ்மஸ் தாத்தாவின் பரிசுகளை பெற்றுக்கொள்வதோ, எந்த விதத்திலும் தவறில்லை. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் நாட்கள், காலங்களுக்கு அப்பாற்பட்டவர்கள், எந்த நாளையும் மகிழ்ச்சியான நாட்களாக மாற்றிக்கொள்ள எங்களுக்கு உரிமையுண்டு.

அப்துல்லாஹ்: இதை எப்படி நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும்?

உமர்: உங்களுடைய அனுமதி யாருக்கு வேண்டும்? நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன? ஏற்றுக்கொள்ளாவிட்டால் எங்களுக்கு என்ன? உங்கள் கட்டுப்பாட்டிற்குள் நாங்கள் வரமாட்டோம் தம்பி. எல்லோரையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நீங்கள் முயற்சிக்கிறீர்கள், ஆனால் அது முடியாது தம்பி.

அப்துல்லாஹ்: பைபிளில் சொல்லப்படாத ஒன்றை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்? இயேசு இதனை அங்கீகரிப்பாரா?

உமர்: தம்பி, எதற்கு முதலாவது முக்கியத்துவம் தரவேண்டுமோ அதற்கு நாங்கள் முதலாவது முக்கியத்துவம் தருகிறோம். மீதமுள்ளதெல்லாம் இரண்டாம் தரமானது.  திருச்சபைக்குள் இருத்தல், பரிசுத்தமாக வாழுதல், பிறரிடம் அன்புடன் இருத்தல், நேர்மையாக வாழ்தல், வேத வாசிப்பு, ஜெபம் என்று அனேக முக்கியமாக விஷயங்கள் உள்ளன, அவைகளுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இதைத் தான் இயேசுவும் விரும்புவார்.

அப்துல்லாஹ்: நீங்க எந்த விளக்கம் கொடுத்தாலும், என்னால் அதனை அங்கீகரிக்க முடியாது.

உமர்: தம்பி, ஏற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளாதது உன் விருப்பம். சரி ஒரு முக்கியமாக கேள்வியை நான் கேட்கிறேன், அதற்கு பதில் தரமுடியுமா?

அப்துல்லாஹ்: சரி சொல்லுங்க.

உமர்: இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் (கிறிஸ்மஸ் தாத்தா) யார் என்று உனக்குத் தெரியுமா?

அப்துல்லாஹ்: [சிரிக்கிறார்]  என்ன, இஸ்லாமின் சாண்டா கிளாஸ்ஸா? என்ன சொல்றீங்க?

உமர்: உனக்கு நான் அதனை விளக்குகிறேன். பொதுவாக சாண்டா கிளாஸ் பிள்ளைகளுக்கு பரிசுகளை வழங்குவார். பிள்ளைகள் அதனால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதே  போல, இஸ்லாமின் சாண்டா கிளாஸ் உலக மக்களுக்கு ஒரு மிகப்பெரிய பரிசை கொடுத்து இருக்கிறார் அவர் யார் என்று உனக்குத் தெரியுமா?

அப்துல்லாஹ்: நீங்க சொல்வதைப் பார்த்தால், இஸ்லாமில் யாரையோ குறிப்பிட்டு, இவர் தான் சாண்டா கிளாஸ் என்று சொல்வீர்கள் போல இருக்கிறதே!

உமர்: நீ சொன்னது சரியானது தான். ஆனால், அவர் யார் என்று உனக்குத் தெரியுமா? 

அப்துல்லாஹ்: எங்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைத் தான் நீங்கள் "இஸ்லாமின் சாண்டா கிளாஸ்" என்று  கூறுகிறீர்களா?

உமர்: இல்லை, முஹம்மது இல்லை. முஹம்மது அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து யாரையும் காப்பாற்ற அவரால் முடியாது என்று சொல்லியுள்ளாரே: பார்க்க புகாரி ஹதீஸ் 2753:

2753. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்" என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து நின்று, 'குறைஷிக் குலத்தாரே!" என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), 'ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை(மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்). (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது" என்று கூறினார்கள். 

இதே போன்ற ஓர் அறிவிப்பை இப்னு ஷிஹாப்(ரஹ்) வழியாக அஸ்பஃக்(ரஹ்) அறிவித்தார். 

நான் சொல்லும் இஸ்லாமின் சாண்டா கிளாஸ் அல்லாஹ்வின் அழிவிலிருந்து உலக மக்களை காப்பாற்றியுள்ளார். 

அப்துல்லாஹ்: அல்லாஹ்வாக இருக்குமோ! 

உமர்: இல்லை, அல்லாஹ்வே எப்படி தன்னுடைய தண்டனையிலிருந்து நம்மை காப்பாற்றியிருப்பார்.  அல்லாஹ் இல்லை. இஸ்லாமின் சாண்டா கிளாஸிற்கு கிறிஸ்தவர்களாகிய நாங்கள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரும் நன்றி சொல்லவேண்டும்.

அப்துல்லாஹ்: எனக்கு தெரியாது அண்ணா, நீங்களே சொல்லுங்கள்.

உமர்: சரி, இதை விளக்குவதற்கு கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கவேண்டும். யார் நம்மை அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளார்? 

இதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பாக, ஏன் அல்லாஹ் நம்மை அழிக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதை அறிந்துக் கொள்ளவேண்டும். சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் எண் 5304 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:

5304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

இதே விவரம் எண்கள் 5302 மற்றும் 5303 ஹதீஸ்களிலும் உள்ளது.

'அல்லாஹ் ஏன் நம்மை அழித்துவிடுகிறார்?' நாம் பாவம் செய்யாமல் இருந்துவிட்டால் நம்மை அல்லாஹ் அழித்துவிடுவாராம். மேலும் பாவம் செய்கின்ற மக்களை கொண்டுவந்து, அவர்கள் பாவம் செய்து மன்னிப்பு கேட்டால் அவர்களை மன்னிப்பாராம்'

தம்பி இந்த ஹதீஸ்  பற்றி நீ என்ன நினைக்கிறாய்?

அப்துல்லாஹ்: மக்கள் மன்னிப்பு கோரினால் தானே அல்லாஹ் அவர்களை மன்னிக்கமுடியும்? மக்கள் பாவம் செய்தால் தானே அவர்கள் மன்னிப்பு கேட்கமுடியும்?

உமர்: அல்லாஹ் தனது மன்னிக்கும் குணத்தை காட்டுவதற்கு மக்கள் பாவம் செய்யவேண்டுமென்று விரும்புகிறார். இது சரியானதா? மேலும் அப்படி பாவம் செய்யாத மக்களை அழித்துவிடுவேன் என்றுச் சொல்வது தான் வேதனைக்குரிய விஷயம். 

அப்துல்லாஹ்: அண்ணா ஒரு நிமிஷம் நில்லுங்க. மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ் பாவம் செய்யாத மக்களை அழிப்பதாகச் சொல்லவில்லையே! "அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு" என்று தானே சொல்லியுள்ளார்.

உமர்: " அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான்" என்ற சொற்றொடரின் பொருள் என்னவென்று சரியாக உனக்கு புரிகின்றதா? உனக்கு சரியாக புரியவேண்டுமென்பதற்காக ஆங்கிலத்தில் இந்த ஹதீஸை ஒரு முறை படிப்போமா? இதோ பேஸ்ட் செய்கிறேன், படித்துப்பார்:

6621   Abu Ayyub Ansari reported that Allah's Messenger (may peace be upon him) said: If you were not to commit sins, Allah would have swept you out of existence and would have replaced you by another people who have committed sin, and then asked forgiveness from Allah, and He would have granted them pardon.  

6622   Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) having said: By Him in Whose Hand is my life, if you were not to commit sin, Allah would sweep you out of existence and He would replace (you by) those people who would commit sin and seek forgiveness from Allah, and He would have pardoned them. 

மூலம்: http://www.searchtruth.com/book_display.php?book=037&translator=2&start=12&number=6621

ஆங்கிலத்தில் "Allah would have swept you out of existence" என்று வருகின்றது.  ஆக, பாவம் செய்யாத மக்களை அல்லாஹ் அழித்துவிடுகின்ற இறைவனாக இருக்கிறார் என்று முஹம்மது இந்த ஹதீஸின் மூலமாக கூறுகிறார்.

அப்துல்லாஹ்: சரி, இந்த ஹதீஸுக்கும், இஸ்லாமின் சாண்டா கிளாஸ் என்று நீங்க சொல்வதற்கும் என்ன சம்மந்தம்?

உமர்: இதோ விளக்குகிறேன். நாம் பாவம் செய்யாமல் இருந்தால் அல்லாஹ் நம்மை அழித்து இருந்திருப்பார். ஆனால், நாம் அல்லாஹ்வினால் அழிக்கப்படாமல் இருக்கிறோம். இதன் பொருள் என்ன?

அப்துல்லாஹ்: நாம் பாவம் செய்கின்றோம் என்று அர்த்தம்.

உமர்: சரியாகச் சொன்னாய். நாம் பாவம் செய்வதற்கு யார் காரணம் தெரியுமா உனக்கு?  

இப்போது குர்-ஆன் வசனங்களை படிப்போம். 

2:35. மேலும் நாம், "ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னோம்.

2:36. இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், "நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு" என்று கூறினோம்.

7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).

7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்.

7:21. "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான்.

7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.

இந்த வசனங்களின் படி ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ய காரணமாக இருந்தது யார்? ஷைத்தான் ஆவான். ஒருவேளை ஷைத்தான் அவர்களை ஏமாற்றாமல் இருந்திருந்தால் என்ன நடந்து இருந்திருக்கும்? மேற்கண்ட ஹதீஸின் படி, அல்லாஹ் ஆதாமையும், ஏவாளையும் அழித்து இருந்திருப்பார். மேலும் பாவம் செய்யும் வேறு ஒரு மக்களை கொண்டு வந்து இருப்பார்.

ஆனால், ஷைத்தானின் புண்ணியத்தினால், ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபடியினால் அல்லாஹ்வினால் அவர்கள் அழிக்கப்படாமல் இருந்தார்கள். 

ஆக, ஆதாமையும், ஏவாளையும், இவர்கள் மூலமாக வந்த உலக மக்கள் அனைவரையும் காப்பாற்றியது யார்? ஷைத்தான் என்றுச் சொல்லக்கூடிய சாத்தான் தானே.

அப்துல்லாஹ்: அண்ணா, நீங்க சொல்வது கொஞ்சம் புரியுது, கொஞ்சம் புரியவில்லை. அன்று சாத்தான், ஆதாமையும், ஏவாளையும் வஞ்சித்து பாவம் செய்யவைத்தான், ஆனால், இன்று நம்மை பாவம் செய்யச் செய்ய தூண்டுவது யார்?

உமர்: ஓ.. என் அருமை தம்பியே! நீ முதலில் குர்-ஆனை அரபியில் படிப்பதை நிறுத்திவிட்டு தமிழில் படிக்க ஆரம்பி.  

குர்-ஆன் 15:39 என்ன சொல்கிறது என்று ஒரு முறை படித்துப்பார்.

15:39. (அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன்.

இப்படி சாத்தான் வழிக்கேட்டில் நம்மை செலுத்துகிறான் என்று நாம் வேதனை அடையத்தேவையில்லை, ஏனென்றால், நாம் பாவம் செய்யவில்லையானால், அல்லாஹ் நம்மை அழித்துவிடுவார். 

ஆக, இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கமாக இருக்கிறது என்று நாம் நம்பினால், சாத்தானை நாம் வெறுக்கக்கூடாது, அவனுக்கு நன்றி செலுத்தவேண்டும். "அல்லாஹ்வின் அழிவிலிருந்து காப்பாற்றிய சாத்தானே" உனக்கு நன்றி என்று மக்கள் சொல்லவேண்டும்.

எனவே, மேற்கண்ட குர்-ஆன் மற்றும் ஹதீஸை உண்மை என்று நாம் நம்பினால், சாத்தான் தான் உலக மக்களின் இரட்சகன் ஆவான், ஹீரோ ஆவான், உலக மக்கள் அழிக்கப்படாமல் இருப்பதற்கு இவனே காரண கர்த்தா ஆவான். சாத்தான் தான் இஸ்லாமின் இரகசிய சாண்டா கிளாஸ் ஆவான். நமக்கு மறைமுகமாக பரிசுகளை  வழங்கி காப்பாற்றியவன் சாத்தான் ஆவான்.

தம்பி உனக்கு புரிந்ததா? இன்னும் விளக்கவேண்டுமா?

அப்துல்லாஹ்: எனக்கு குழப்பமாக உள்ளது. 

உமர்: இதில் குழம்புவதற்கு என்ன இருக்கிறது?

• பாவம் செய்யாதவர்களை அல்லாஹ் அழிப்பதாக உங்கள் இறைத்தூதர் சொல்லியுள்ளார்.

• சாத்தான் மக்களை பாவம் செய்யத்தூண்டுகின்றான்.

• மக்கள் பாவம் செய்தபடியால், அல்லாஹ் மக்களை அழிக்கவில்லை

• ஆக, மக்கள் அல்லாஹ்வினால் அழிக்கப்படாமல் இருந்ததற்கு காரணமாக இருப்பவன் சாத்தான், எனவே இஸ்லாமின் படி நாம் அனைவரும் சாத்தானுக்கு நன்றி சொல்லவேண்டும்.

இது தான் இஸ்லாமிய சாண்டா கிளாஸின் சுருக்கம்.

அப்துல்லாஹ்: ம்ம்ம்…. இன்றைக்கு இது போதும், நாளக்கு நான் ஸ்கைப்பில் வருகிறேன் அண்ணா.

உமர்: கொஞ்சம் இரு தம்பி, இன்னும் கிறிஸ்மஸ் தாத்தா கதை முடியவில்லை.

அல்லாஹ் மன்னிக்கவேண்டும் என்பதற்காக உலக மக்கள் பாவம் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்ப்பார்த்தால், அல்லாஹ்வின் எதிரி யாராக இருக்கமுடியும் சொல்லு?

அப்துல்லாஹ்: ம்ம்ம்…எனக்கு தெரியாது.

உமர்: அல்லாஹ்வின் எதிரிகள் பாவம் செய்யாதவர்கள் தானே. ஏனென்றால், பாவம் செய்யாதவர்களை அல்லாஹ் அழித்துவிடுகின்றான் இல்லையா? 

இஸ்லாமின் படி பாவம் செய்யாதவர் யார்? 

இயேசுக் கிறிஸ்து தான் அவர்.

சஹிஹ் அல் புகாரி 3286ன் படி,உலகில் பிறக்கும் ஒவ்வொருவரையும் சாத்தான் தொடுகின்றான், ஆனால், இயேசுவையோ அவனால் தொடமுடியவில்லை. மேலும் பாவம் செய்யாதவர் இயேசு ஆவார்.  தம்பி கீழ்கண்ட ஹதீஸை படித்துப்பார்:

3286. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஆதமின் மகன் (மனிதன்) ஒவ்வொருவனும் பிறக்கும்போது, அவனுடைய இரண்டு (விலாப்) பக்கங்களிலும் ஷைத்தான் தன் இரண்டு விரல்களால் குத்துகிறான்; மர்யமின் குமாரர் ஈஸாவைத் தவிர (அவர் பிறந்தபோது அவரை விலாப் பக்கம்) குத்தச் சென்றான். ஆனால், அவரைச் சுற்றியிருந்த மெல்லிய சவ்தை; தான் குத்தினான். (அதுதான் அவனால் முடிந்தது.) 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

ஆதாம் பாவம் செய்தார், நோவா பாவம் செய்தார், ஆபிரகாம் பாவம் செய்தார், மோசே பாவம் செய்தார், அவ்வளவு ஏன் சர்வ சாதாரணமாக முஹம்மது பாவம் செய்தார். ஆனால் பாவமே செய்யாதவர் இயேசு ஆவார்.

இயேசுவை தவிர மற்ற எல்லா நபிமார்களும் பாவம் செய்தார்கள். 

அல்லாஹ் எல்லோரையும் மன்னிப்பார், ஆனால் இயேசுவை மன்னிக்கமாட்டார், ஏனென்றால், இவர் பாவம் செய்யவில்லை.

எனவே, அல்லாஹ்வின் எதிரி இயேசுக் கிறிஸ்து ஆவார்.

நீங்கள் பாவம் செய்யவில்லையானால், நான் அழித்துவிடுவேன் என்று அல்லாஹ் எச்சரிக்கை கொடுத்தும், இயேசு பாவம் செய்யவில்லை என்பதை நாம் இதுவரை கண்ட விவரங்களிலிருந்து அறியலாம். அல்லாஹ்வின் அச்சுருத்தலுக்கெல்லாம் இயேசு இணங்கவில்லை. சாத்தானும் இயேசுவை தொடமுடியவில்லை.

கடைசியாக, நம்மை பாவம் செய்யச் செய்து, அல்லாஹ்வின் அழிவிலிருந்து நம்மை காப்பாற்றியது ஷாத்தான் ஆவான். எனவே, இயேசுவை தவிர இதர நபிமார்களையும், முஸ்லிம்களையும் மற்றும் உலக மக்கள் அனைவரையும்  காப்பாற்றியது சாத்தான் ஆவான். ஆக, இஸ்லாமின் சாண்டா கிளாஸாக இருந்து கிறிஸ்மஸ் பரிசுகளை வழங்கியவன் சாத்தான் ஆவான்.

உனக்கு  மேற்கண்ட ஹதீஸ்கள், மற்றும் குர்ஆன் வசனங்கள் புரிகின்றதா? முக்கியமாக இயேசுவின் பிறப்பு பற்றிய ஹதீஸின் படி, சாத்தான் இயேசுவை தொடமுடியவில்லை... இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா?

நான் இதுவரை சொன்ன விவரங்கள் கீழ்கண்ட வீடியோவில்  டேவிட் உட் என்ற கிறிஸ்தவர் அழகாகவும், வேடிக்கையாகவும், கோர்வையாகவும் விவரித்துள்ளார்.

http://www.youtube.com/watch?v=M-GV9_TK3gE 

அப்துல்லாஹ்: அண்ணா, எனக்கு வேலை இருக்கிறது, நாம் நாளை சந்திப்போம்.

உமர்: சரி தம்பி, நாளைக்கு  சரியான கேள்விகளை தயார்படுத்திக்கொண்டு வா. 

[அப்துல்லாஹ், மரியாளுக்கு அல்லாஹ் செய்த அற்புதம் பற்றிய கேள்வியை கேட்கவுள்ளார். இந்த கேள்விக்கு உமர் என்ன பதில் சொல்கிறார் என்பதை அடுத்த உரையாடலில் காண்லாம்]

மூலம்

உமரின் 2013 கிறிஸ்மஸ் தொடர் கட்டுரைகள்