பாகம் 5 - கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - போதகரின் மகள் இமாமின் மகனை திருமணம் செய்தால்?

 [கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் பாகம் 1, பாகம் 2, பாகம் 3 மற்றும் பாகம் 4 ஐ படிக்க சொடுக்கவும்.]

முன்னுரை: உமரும் அவரது நண்பர் ஜான்சனும், சபை கூட்டம் முடிந்த்தும், போதகரோடும், அவரது குடும்பத்தோடும் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறார்கள். போதகருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உண்டு. மூத்தவனுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிறது, மற்ற இருவரும் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹோட்டலில் உணவு சாப்பிடும் போது... போதகரின் மகள் திடீரென்று "உமரண்ணா... ஒரு கிறிஸ்தவ பெண்.. ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துக்கொள்வது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டாள்….இப்படிப்பட்ட கேள்வியை அதுவும் போதகரின் மகளின் வாயிலிருந்து அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை… போதகரின் கண்கள் தன் மகளைப் பார்த்தது... உமருக்கும் ஜான்சனுக்கும் தலை சுற்றியது... போதகரின் மனைவியாகிய பாஸ்டரம்மாவிற்கோ..... தாங்க முடியாத அளவிற்கு சிரிப்பு வந்தது.]

இந்த பாகத்தில், போதகரின் பிள்ளைகள் மூவரும் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாமியர்களை திருமணம் செய்துக்கொள்ளுதல் பற்றி காண்போம்.


பாஸ்டரின் மகள்: உமரண்ணா, ஒரு கேள்வியை கேட்கட்டுமா?

உமர்: நாம் ஆர்டர் செய்த உணவு இன்னும் வரவில்லை, அதுவரைக்கும் நாம் பேசுவோம், சரி கேளுங்க.

பாஸ்டரின் மகள்: ஒரு கிறிஸ்தவ பெண் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துக் கொள்வது பற்றி உங்கள் கருத்து என்ன?

உமர்: ?!?.... என்னது? ஒரு முஸ்லிமை ஒரு கிறிஸ்தவ பெண் திருமணம் செய்வது பற்றியா?

பாஸ்டரின் மகள்: ஆமாம்.

[பாஸ்டர் ஒரு மாதிரியாக தன் மகளை பார்க்கிறார், அவளின் அண்ணன்கள் இருவரும், பாஸ்டரம்மாவும், ஒரு மாதிரியாக உமரை பார்த்தவண்ணம் உள்ளுக்குள் சிரித்துக் கொள்கிறார்கள்]

உமர்: என்னம்மா, அந்த கிறிஸ்தவ பெண்ணுக்கு கிறிஸ்தவ பையன் கிடைக்கவில்லையா? கிறிஸ்தவ வாலிபர்கள் பற்றாக்குறையாக இருக்கிறார்களா? முஸ்லிம் பையன் தான் கிடைச்சானா? நீ சொல்வது உன்னைப் பற்றியா அல்லது உனக்கு தெரிந்த வேறு யாராவது கேட்கச் சொன்னார்களா?

பாஸ்டரின் மகள்: அண்ணா, இந்த கேள்வி எனக்காக கேட்கிறேனோ, அல்லது மற்றவர்களுக்காக கேட்கிறேனோ, ஆனால் இது ரொம்பமும் முக்கியமான கேள்வியாக்கும்.

பாஸ்டரம்மா: பிரதர், நீங்கள் தப்பா நெனச்சிக்காதீங்க. உங்களிடம் இப்படிப்பட்ட கேள்வி கேட்கப்போவதா, ஏற்கனவே எங்களிடம் அவள் சொல்லிவிட்டாள்.  பாஸ்டருக்கு மட்டும் தான் தெரியாது.

பாஸ்டர்: ஓஹோ, எனக்குத் தெரியாம இது வெற நடக்குதா? அட்லீஸ்ட் கல்யாண தேதியையாவது எனக்கு சொல்லுவீங்களா? இல்லையா?

பாஸ்டரம்மா: நம்முடைய சபையில் இஸ்லாமிய கூட்டங்கள் நடக்கிறது என்று இவள் தன் தோழிகளிடம் சொன்னாளாம். அப்போது அவளுடைய தோழிகளில் ஒருத்தி இந்த கேள்வியை இவளிடம் கேட்டாளாம்.  சகோதரர் உமரிடம் கேட்டு சொல்வதாக இவள் சொல்லியிருக்கிறாள். காலையிலிருந்து நான் உமரண்ணாவிடம் பேசனும் என்று சொல்லிக்கிட்டே இருந்தாள், இது தான் விஷயம். நம்ம பொண்ணு பத்தி உங்களுக்குத் தெரியாதா?

பாஸ்டரின் முத்த மகன்: ஆமாம், என் தங்கச்சி பற்றி எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு. காதலிச்சா ஒரு கிறிஸ்தவ பையனைத் தான் காதலிப்பாள். அப்படித்தானே!

பாஸ்டரம்மா: டேய், சும்மா ஏன் அவளை தொந்தரவு பண்றே, நீயே அவளுக்கு காதலிக்க சொல்லிக் கொடுப்பாய் போல் இருக்கிறதே!

பாஸ்டரின் மகள்: நீங்க எல்லாரும் சும்மா இருப்பீங்களா கொஞ்ச நேரம். டேய் பெரிய அண்ணா உன்னை நான் அப்பரம் பார்த்துக் கொள்கிறேன், அண்ணி கிட்டே உன்னை மாட்டிவிடுகிறேன் இரு.

உமரண்ணா நீங்க சொல்லுங்கள், காதலித்து திருமணம் செய்வதோ அல்லது பெற்றோர்களாக பார்த்து செய்வதோ அது வேறு விஷயம். ஒரு கிறிஸ்தவ  பெண் ஒரு முஸ்லிமை திருமணம் செய்துக் கொள்ளலாமா? இல்லையா?

உமர்: நான் வசமா மாட்டிக்கிட்டேன், இன்னும் சாப்பாடு வேறு வரவில்லை! சரி விஷயத்துக்கு வருகிறேன்.  தங்கச்சி இது ரொம்ப சீரியஸான விஷயம், கவனமாகக் கேள்.

அவிசுவாசியோடு விசுவாசி திருமணம் செய்துக்கொள்ள பைபிள் அனுமதிப்பதில்லை:

கிறிஸ்தவர்களாகிய நாம் ஒன்றை சரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், அதாவது,  எக்காரணத்தைக் கொண்டும், ஒரு விசுவாசி ஒரு அவிசுவாசியை திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது.

பாஸ்டரின் இளைய மகன்: அண்ணா ஒரு கேள்வி, அவிசுவாசி என்றுச் சொன்னா? கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் மட்டுமேயா? அல்லது கிறிஸ்தவர்களாக கூட அவர்கள் இருக்கலாமா?

உமர்: இது ரொம்ப முக்கியமான சிந்தனை. அவிசுவாசி என்றால், கிறிஸ்தவர்கள் அல்லா(ஹ்)தவர்களாகிய முஸ்லிம்களை மட்டும் குறிப்பதில்லை.  அவிசுவாசி என்றால் (இரட்சிக்கப்படாத) பெயரளவு கிறிஸ்தவர்களாக கூட இருக்கலாம் அல்லது வேறு மார்க்கத்தார்களாக இருக்கலாம். எனவே, ஒரு விசுவாசி அவிசுவாசியோடு திருமண பந்தத்தில் இறங்குவது கர்த்தரின் சித்தமல்ல.

பாஸ்டரின் மகள்: இதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தை சொல்லுங்களேன், பிளீஸ்.

பாஸ்டர்:  2 கொரிந்தியர் 6:14,15 வசனங்கள் இதைப் பற்றி பேசுகின்றது.

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது  (2 கொரிந்தியர் 6:14,15).

 [உணவு வந்துவிட்டது, சாப்பிட்டுக்கொண்டே உரையாடல் தொடர்கிறது]

பாஸ்டரின் மகள்: ஏன் ஒரு கிறிஸ்தவ பெண், ஒரு முஸ்லிமை திருமணம் செய்யக்கூடாது? அந்த பெண் பழைய படி தேவனை தொழுதுக் கொள்ளமுடியாது என்பதால் தான் தடை என்று நான் நினைக்கிறேன். ஒரு வேளை அந்த முஸ்லிம் உன் மார்க்கத்தை நீ தாராளமாக பின்பற்றலாம் என்று வாக்குறுதி கொடுத்தால், பிரச்சனை இல்லை அல்லவா?

உமர்: ஆம், முதலாவது காரணம், ஒரு பெண் ஒரு முஸ்லிமை திருமணம் செய்துக்கொண்டால், பழைய படி தேவனை தொழுதுக்கொள்ளவோ, வேதம் வாசிக்கவோ, ஆலயத்திற்கு செல்லவோ முடியாது என்பது தான். ஆனால், இன்னும் அனேக நடைமுறை பிரச்சனைகளும் உள்ளன.

இரண்டாவதாக, ஒரு முஸ்லிம் "உன் தேவனை நீ தொழுதுக்கொள்ள தாராளமாக நான் அனுமதிப்பேன்" என்று வாக்குறுதி கொடுக்கிறார் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஒருவேளை ஒரு இஸ்லாமியர் மேற்கண்ட விதமாக சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம், ஆனால், நடைமுறையில் அது சாத்தியமற்றது. இதற்கு அனேக காரணங்கள் உள்ளது.

இஸ்லாமின் படி, ஒருவனின் மனைவி அல்லாஹ்வை தொழாமல் வேறு தெய்வத்தை தொழுதால் அவள் ஒரு காபிர் என் கருதப்படுவாள்:

உண்மையாகவே ஒரு முஸ்லிம், முழு மனதோடு தன் மனைவிக்கு அவள் தெய்வத்தை தொழுதுக்கொள்ள அனுமதி கொடுத்தால், இது மகிழவேண்டிய விஷயம். ஆனால், நடைமுறையில் இது சாத்தியமில்லாதது. சில நாட்கள், மாதங்கள் அல்லது ஒரு சில வருடங்கள் வேண்டுமானால், அந்த முஸ்லிம் கொடுத்த சுதந்திரம் அந்த பெண்ணுக்கு கிட்டும் (அவன் குடும்பத்தை, இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு, தூரமாக வாழ்ந்தால் சில காலம் இது சாத்தியம்), ஆனால், நிரந்தரமாக அந்த சுதந்திரத்தை அந்த சகோதரி அனுபவிக்க  முடியாது.

ஒருமுக்கியமான விஷயத்தை இங்கு நாம் கவனிக்கவேண்டும், ஒரு முஸ்லிம் நீ உன் தெய்வத்தை சுதந்திரமாக தொழுதுக்கொள் என்று சொல்லும் போது, அவன் மறைமுகமாக சில விஷயங்களை சொல்லிவிடுகின்றான் என்று அர்த்தம். 

அதாவது அவன்:

அ) ஒரு பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கிறான்

ஆ) அவனுக்கு இஸ்லாமின் அடிப்படை கூட தெரியாது

இ) அவன் வாரம் ஒரு முறை அல்லது எப்போதாவது ஒரு முறை மசூதிக்கு தொழுகைக்குச் செல்பவன்  மற்றும் இதர இஸ்லாமிய மக்களோடு அதிகமாக தொடர்பு இல்லாதவன் ஆவான்.

ஈ) இஸ்லாமிய மார்க்க விஷயத்தில் பெரும்பான்மையாக விருப்பமில்லாதவன் ஆவான்.

பாஸ்டரின் மகள்: இப்படிப்பவன் கிடைத்தால் நல்லது தானே! ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு இப்படிப்பட்டவன் தான் ஏற்ற துணை. இவனால் எந்த பிரச்சனையும் உண்டாகாது இல்லையா?

உமர்: ஆம், ஒரு மதசார்ப்பற்ற மனிதனாக இவன் காணப்படுகிறான். இவனால் அதிக பிரச்சனை உண்டாகாது.

பாஸ்டரின் இளைய மகன்: அப்படியானால், ஒரு கிறிஸ்த பெண் இப்படிப்பட்ட  நபரை திருமணம் செய்துக்கொள்ளலாம் அல்லவா?

உமர்: இல்லை, திருமணம் செய்துக் கொள்ளக்கூடாது.

பாஸ்டரின் இளைய மகன்: ஏன்? இப்போது என்ன பிரச்சனை?

உமர்: பிரச்சனை அந்த நபர் அல்ல. திருமணம் ஆகும் வரையில் உள்ள காலகட்டத்தில் பிரச்சனை வராது. திருமணம் ஆன சில மாதங்களில் கூட சில நேரங்களில் வராது. உண்மை பிரச்சனை அதன் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கும்?

பாஸ்டரின் இளைய மகன்:  அது எப்படி?

உமர்: இந்த நபர் தன் வாழ்நாள் முழுவதும் இதே மன நிலையில்  இருப்பார் என்று என்ன நிச்சயம்?  இந்த நபர் சிறிது சிறிதாக இஸ்லாமில் அக்கரை காட்டமாட்டான் என்று என்ன நிச்சயம்? பெயரளவு முஸ்லிமிலிருந்து, இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றவேண்டும் என்ற ஆவலுள்ள உண்மை முஸ்லிமாக மாறமாட்டான் என்று என்ன நிச்சயம்?

பாஸ்டரின் முத்த மகன்: ஏன் நாம் இப்படி நினைக்கவேண்டும்? ஏன் ஒரு நபர் வாழ்நாள் முழுவதும் மதசார்ப்பற்ற முறையில் நடக்க வாய்ப்பு இல்லையா?

உமர்: ஒரு மனிதன் மதசார்ப்பற்றவனாக வாழ்நாள் முழுவதும் இருக்க, வாய்ப்பு உண்டு. ஆனால், இஸ்லாமியனுக்கு வாய்ப்பு மிகக்குறைவு. 

ஏனென்றால்:

அ) இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக கூட்டுக்குடும்பமாக வாழ்வார்கள்,

ஆ) அவர்களை அவர்களின் மசூதியும், உள்ளூர் இஸ்லாமிய அறிஞர்களும் அதிகமாக கட்டுப்படுத்துவார்கள்.

இ) இஸ்லாமிய சமுதாயத்தை விட்டு வெளியே, அதிக நாட்கள் ஒரு முஸ்லிமால் இருக்கமுடியாது. (அவன் வேறு நாட்டுக்குச் சென்று, தன்னை முஸ்லிம் என்று காட்டிக்கொள்ளாமல் வாழ்ந்தால் தவிர. வேறு நாடுகளில் அவன் முஸ்லிம் என்று அடையாளம் காட்டிக்கொண்டால், அந்த நாட்டின் இஸ்லாமிய சமுதாயம் இவரோடு தொடர்பு கொண்டு, அவரை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும்).

ஈ) ஒருவன் வாலிப நாட்களில் எவ்வளவு மதசார்ப்பற்ற அல்லது மத சகிப்புத் தன்மையுள்ள நபராக இருந்தாலும், திருமணம் ஆன பிறகு, மனைவி, பிள்ளைகள், வேலை, குடும்பம், பெற்றோர்களை போஷித்தல் போன்றவைகளில் அவன் ஈடுபடும் போது, அவனை அதிகமாக இஸ்லாமிய சமுதாயம் கட்டுப்படுத்த முயற்சி எடுக்கும். இந்த நேரத்தில் அவன் தன் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களின் பேச்சை கேட்கவேண்டும், இஸ்லாமிய அறிஞர்களின் பேச்சை கேட்கவேண்டும்,  இப்போது அவன் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றும் முஸ்லிமாக மாறுவான். இது தான் பிரச்சனை.

பாஸ்டரின் மகள்: மாறட்டுமே, அவன் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்றட்டுமே, அவன் ஏற்கனவே தன் மனைவிக்கு வாக்கு கொடுத்துள்ளான் அல்லவா? எனவே, அவளை தொந்தரவு செய்யமாட்டான் அல்லவா? 

உமர்: இங்கு தான் நாம் தவறு செய்கிறோம். ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டமாகிய ஷரியா சட்டத்தை  தன் குடும்பத்தில் பின்பற்ற ஆரம்பித்தால், இந்த கிறிஸ்தவ சகோதரியின் உரிமை பரிக்கப்படும்.

பாஸ்டரின் முத்த மகன்: அது எப்படி பரிக்கப்படும், அவன் தான் வாக்குறுதி கொடுத்துள்ளானே!

உமர்: இதோ விளக்குகிறேன். ஒருவன் இஸ்லாமை முழுவதுமாக பின்பற்ற விரும்பினால்:

அ) தன் மனைவி அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை வணங்க அனுமதி இல்லை. அவளுடைய மனைவி "காபிர்" எனப்படுவாள்.

ஆ) ஒரு முஸ்லிம் காபிரோடு வாழ்க்கை நடத்த அனுமதி இல்லை. ஒன்று அவளை முஸ்லிமாக மாற்றவேண்டும், அல்லது அவளை விவாகரத்து செய்துவிடவேண்டும்.

இ) இது ஒரு புறமிருக்க,  தன் முதல் மனைவியின் ஒப்புதல் இல்லாமல் இந்த மனிதன், இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை அவனுக்கு உண்டு.

ஈ) எனக்குத் தெரியாமல் என் கணவன் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார் என்றுச் சொல்லி, இந்த முதல் மனைவியாகிய கிறிஸ்தவப் பெண், அவன் மீது வழக்கு தொடரமுடியாது. இஸ்லாமில் அது செல்லுபடியாகாவது. 

உ) மேலும், இந்த கிறிஸ்தவ பெண்ணை அந்த நபர் தகுந்த காரணம் இல்லாமல் விவாகரத்து செய்யலாம்.

(தன் மனைவி ரொம்பவும் கிழவியாக இருக்கிறார் என்பதற்காக விவாகரத்து செய்ய விரும்பினார் இஸ்லாமிய நபியாகிய முஹம்மது, இதனால் பயந்துபோய் அந்த பெண் தன்னிடம் இவர் செலவிடும் நாளை விட்டுக்கொடுத்துவிட்டாள், குறைந்த பட்சம் முஹம்மதுவின் மனைவி என்ற நிலையிலெயே மரித்தால் நல்லது என நினைத்துக்கொண்டார்.)

ஊ) திடீரென்று ஒரு நாள், தனக்கு 18 வயதில் மகள் இருக்கும் போது கூட, இந்த முஸ்லிம் ஒரு 9 வயது நிரம்பிய சிறுமியைக் கொண்டுவந்து, இவள் என் இரண்டாவது மனைவி (உன் சக்காளத்தி) என்று தன் மனைவியிடம் கூறினாலும், இந்த கிறிஸ்தவ பெண்ணால் ஒன்றுமே செய்ய முடியாது. என் கணவர் ஒரு சிறுமியை கொண்டு வந்தார், அவள் என் மனைவி என்கிறார் என்றுச் சொல்லி, அவர் மீது வழக்கு தொடர முடியாது.

எ) எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த முஸ்லிம் ஒரு வசதி படைத்த நபராக இருந்தால், ஒரு பெண்ணை வீட்டிக்கு கொண்டு வந்து, இவள் ஒரு அடிமை, நான் இவளை விலை கொடுத்து வாங்கினேன், இனி நம் வீட்டில் இவள் அடிமையாக வேலை செய்வாள் என்றுச் சொல்லி விட்டு, அன்று இரவே, அப்பெண்ணிடம் உடலுறவு கொள்ளச் சென்றாலும், இந்த கிறிஸ்தவ பெண் ஒன்றுமே செய்யமுடியாது.

ஏ) அதிக பட்சம் ஒரு நேரத்தில் நான்கு மனைவிகள் ஒரு முஸ்லிமுக்கு அனுமதி உண்டு என்று இஸ்லாம் சொன்னாலும், திருமணம் செய்துக்கொள்ளாமல் அடிமைப் பெண்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு, அவர்களிடம் உடலுறவு கொள்ள முஸ்லிம்களுக்கு அதிகாரமுண்டு. இதை தட்டிக்கேட்க மனைவிகளுக்கு உரிமை இல்லை.

ஐ) தன் மனைவி காபிராக இருப்பதினால், தான் கொடுத்த வாக்குறுதியை முறித்துக்கொள்ளவும் ஒரு முஸ்லிமுக்கு அதிகாரம் உண்டு. எனவே, தான் அறியாமையின் காலத்தில்  (இஸ்லாமிய பற்றில்லாமல் இருந்த காலத்தில்) கொடுத்த வாக்குறுதியை அல்லாஹ்விற்காகவும், இஸ்லாமுடைய நன்மைக்காகவும், அறிவு வந்த பிறகு (இஸ்லாமிய பற்று வந்த பிறகு) ஒரு முஸ்லிம் முறிக்கலாம், இதில் தவறில்லை.

ஒ) இன்னும் மனைவி கேள்விகள் கேட்டுக்கொண்டு, எனக்கு சுதந்திரம் வேண்டுமென்று சொல்லிக்கொண்டு இருந்தால், இதர விஷயங்களில் முக்கியமாக மார்க்க விஷயங்களில் கீழ்படியாமல் இருந்தால், மனைவியை அடிக்கவும் ஒரு முஸ்லிக்கு உரிமை உண்டு, யோபு தன் மனைவியை இத்தனை அடி அடிப்பேன் என்று அல்லாஹ்விடம் சத்தியம் செய்தது போல.

பாஸ்டர்: ஒரு நிமிஷம் நில்லுங்க. யோபு தன் மனைவியை அடிப்பேன் என்று சத்தியம் செய்தாரா? அப்படி ஒன்றும் நான் பைபிளில் படிக்கவில்லையே!

உமர்: பாஸ்டர், இவர் இஸ்லாமிய யோபு, பைபிளின் யோபு அல்ல. இஸ்லாமிய யோபுக்கு எல்லாம் சாத்தியம். குர்-ஆன்  38:44 வசனம் இப்படி சொல்கிறது:

 "ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்" (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார். (குர்-ஆன் 38:44 - முஹம்மது ஜான் டிரஸ்ட்)

"ஒரு பிடி (புல்) கத்தையை எடுத்து, அதனைக் கொண்டு (உங்களது மனைவியை) அடியுங்கள். நீங்கள் உங்களுடைய சத்தியத்தை முறிக்க வேண்டியதில்லை" என்று கூறினோம். நிச்சயமாக நாம், அவரை மிக்க பொறுமை உடையவராகவே கண்டோம். அவர் மிக்க நல்லடியார். நிச்சயமாக அவர் (ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை) நோக்கினவராகவே இருந்தார். (குர்-ஆன்  38:44 - அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)

பாஸ்டர்: இது வேடிக்கையாக இருக்கிறதே! புல் எடுத்து அடிக்கவேண்டுமா? ஏன்?

உமர்: இதைப் பற்றி நாம் இன்னொறு முறை தியானிப்போம். அங்கு அல்லாஹ் சொன்னது புல்லா அல்லது தடியா? அடிக்கவேண்டியதை யாரை? தன்னைத்தானே அடித்துக்கொள்ளவேண்டுமா (பீஜே அவர்களின் விளக்கம்)? தன் மனைவியை  அடிக்கவேண்டுமா (இதர இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கம்)? மேலும் இதைப் பற்றி இஸ்லாமிய விரிவுரையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம்.

பாஸ்டரின் மகள்: ஓ... எனக்கு தலை சுத்துது.

உமர்: ஆம், இஸ்லாமில் பெண்கள் படும் பாடுகள் இருக்கிறதே! அதை விவரிக்க முடியாது. தனக்கே தெரியாமல், தன்னை விவாகரத்து செய்த நிகழ்ச்சிகள் எல்லாம் உண்டு (India: Divorce by text messaging and e-mail on the rise among Muslim men).

முஹம்மதுவின் மனைவிகளை பார்த்து, "உங்களுக்கு உலக பொருட்கள் வேண்டுமானால், அவைகளை அழகான முறையில் அதிகமாக கொடுத்து உங்களை அனுப்பிவிடுகிறேன் (உங்களை முஹம்மது விவாகரத்து செய்யச் சொல்லிவிடுகிறேன்), அதன் பிறகு உங்களை விட நல்லபெண்களை அவருக்கு நான் மனைவிகளாக தருவேன்" என்று அல்லாஹ்வே கூறுகிறார். அதாவது முஹம்மது தன் மனைவிகளை விவாகரத்து செய்துவிடுவார் என்று பயப்பட வைக்கிறது குர்-ஆன். 

பாஸ்டரின் மகள்: ஓ… மிகவும் பரிதாபம் தான். ஆனால், தனக்கு தன் கணவர் வாக்கு கொடுத்தார், ஆனால் இப்போது அதை மறுக்கிறார் என்று இஸ்லாமிய அறிஞர்களிடமே அந்த கிறிஸ்தவ மனைவி நியாயம் கேட்டால்?

உமர்: இஸ்லாமில் ஒரு ஆணுக்கு எதிராக பெண்கள் எடுக்கும் முடிவுகள், வழக்குகள் பெரும்பான்மையாக இஸ்லாமிய அறிஞர்களிடம் செல்லுபடியாகாது. ஒரு முஸ்லிம் அறியாமையின் காலத்தில் செய்த சத்தியத்தை, முறித்துக் கொள்ளலாம், முக்கியமாக இஸ்லாமுக்கு பங்கம் விளைவிக்கும் எந்த காரியத்திலும், நாம் வெற்றி பெற முடியாது.

பாஸ்டரின் மகள்: இது இஸ்லாமுக்கு எங்கே பங்கம் விளைவிக்கிறது? கணவன் முஸ்லிமாக இருக்கட்டும், மனைவி கிறிஸ்தவளாக இருக்கட்டுமே? இதில் என்ன பிரச்சனை?

உமர்: இது தான் பிரச்சனை. இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் முஸ்லிமாக இருந்து மனைவி இதர மார்க்கத்தை பின்பற்றினால், இஸ்லாம் இதனை அவமானம் என கருதுகிறது. ஒன்று அந்த பெண்ணை  முஸ்லிமாக மாற்று அல்லது அவளை விவாகரத்து செய்துவிடு. இதில் ஏதாவது ஒன்றை தெரிந்தெடுக்கவேண்டும். நீதி நியாயம், சமத்துவம், பெண்களின் உரிமை இவைகள் எல்லாம் இங்கு வேலை செய்யாது. முதலாவது இஸ்லாம், அதன் பிறகு மற்றவையெல்லாம்.

பாஸ்டரின் மகள்: இதற்கு மேல் தாங்கும் சக்தி இப்போது எனக்கு இல்லை. போதும்.. போதும். அடுத்தமுறை தேவைப்பட்டால் பேசலாம். என் தொழியிடம் முதலாவது இந்த விவரங்களை நான் தெரிவிக்கவேண்டும்.

உமர்: ஆமாம், முதலாவது உன் தோழியிடம் விவரங்களை கூறிவிடு. மேலும் அதிகமாக விவரங்கள் தேவையென்றால், பாஸ்டரின் மூலமாக என்னை தொடர்பு கொள் என்றுச் சொல். முக்கியமாக, உண்மையாக உன்  தோழி ஒரு முஸ்லிமை நேசிப்பதினால் தான் இந்த கேள்வியை உன்னிடம் கேட்டால் என்று உனக்கு தெரிந்தால், முதலாவது அவளின் பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை சொல்லவேண்டியது உன் முதலாவது கடமையாகும். தேவைப்பட்டால், உன் தோழியோடும், அவளின் பெற்றோர்களோடும் நாம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நல்லது, நாம் பேசிக்கொண்டே சாப்பிட்டும் விட்டோம். கிளம்புவோமா?

பாஸ்டரம்மா: சரி, நானும் இவளும் காரியில் உங்களுக்காக வெயிட்பண்றோம், நீங்க பில் கட்டிட்டு வாங்க.

[பாஸ்டரம்மாவும், அவரது மகளும் கிளம்பிவிட்டார்கள், பில்லுக்காக மற்றவர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள், அப்போது பாஸ்டரின் இளைய மகன் ஒரு கேள்வியை கேட்டான்]

பாஸ்டரின் இளைய மகன்: உமரண்ணா எனக்கு ஒரு கேள்வி உண்டு, கேட்கலாமா?

உமர்: உன் கேள்வி என்ன?

பாஸ்டரின் இளைய மகன்: இதுவரை ஒரு பக்கமாகவே நாம் பேசிக்கொண்டு இருந்தோம், அதாவது ஒரு கிறிஸ்த பெண் ஒரு முஸ்லிம் ஆணை திருமணம் செய்வது பற்றி பேசினோம். என் கேள்வி என்னவென்றால், ஒரு கிறிஸ்தவ ஆண், ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ய முதலாவது என்ன செய்யவேண்டும்?

உமர்: முதலாவது, கத்னா செய்யவேண்டும்?

பாஸ்டரின் இளைய மகன்: கத்னா என்றால் என்ன?

உமர்: கத்னா என்றால் ஒன்றுமில்லை, ஒரு சின்ன 5 நிமிஷ ஆபரேஷன், நாலு தையல் சில வாரங்கள் வரை அருமையான ஓய்வு, அவ்வளவு தான். அதன் பிறகு தான் திருமணம்? எப்படி வசதி? 

பாஸ்டரின் இளைய மகன்: எனக்கு ஒன்னுமே புரியலையே!

உமர்: எல்லா விஷயங்கள் பற்றி பிறகு நாம் பேசலாம். இப்போதைக்கு கத்னா என்றால் என்ன அர்த்தம் என்பதை மட்டும் புரிந்துக்கொள், கத்னா என்றால்  விருத்தசேதனம் என்று அர்த்தம்.

பாஸ்டர்: என்னடா இளையவனே! கத்னா செய்துக் கொள்கிறாயா?

பாஸ்டரின் இளைய மகன்: ஆள விடுங்க சாமி, உடம்புலே ஒரு சின்ன காயம் ஏற்பட்டாலே நான் துடிதுடித்து போய்விடுவேன், அப்படிப்பட்ட என்னிடம் வந்து கத்னா கித்னா என்று கேட்டுக்கிட்டு. நான் பழைய ஏற்பாட்டில் விருத்தசேதனம் பற்றி படிக்கும் போது, ஒரு மாதிரியாக இருக்கும். எப்படி தான் இவர்கள் செய்துக் கொண்டார்கள் என்று ஆச்சரியப்படுவேன், அதுவும் சின்ன வயசுலே இல்லாமே பெரிய ஆம்பளையா ஆகிவிட்ட பிறகும் விருத்தசெதனம் செய்துக்கிட்டாங்க என்று நினைத்தால், எனக்கு ஒரு வகையான பயமா இருக்கும்.

நான் எதோ இஸ்லாம் பற்றி கொஞ்சம் கத்துகலாம் என்று நினைச்சு கேட்டால், என்னை பிரயோஜனமில்லாதவனாக ஆக்கிவிடுவீங்க போல் இருக்கே!

பாஸ்டர்: நீ தானே கேட்டாய், ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய முதலாவது என்ன செய்யவேண்டுமென்று! இப்போ வேண்டாம் என்று சொல்லுகிறாய்!

உமர்: கத்னா செய்தால் பிரயோஜமில்லாதவனாக மாறுவாய் என்று உனக்கு யார் சொன்னார்கள்? இது தவறான விஷயம். கத்னாவினால் நன்மைகள் உண்டு. நானும் விருத்தசேதனம் செய்துக்கொண்டவன் தான். நீயும் செய்துக்கொண்டால் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணத்துக்கு தேடலாம் அல்லவா?

பாஸ்டரின் இளைய மகன்: அய்யய்யோ.. என்னை விட்டுங்கப்பா!...தெரியாம கேட்டுட்டேன். நீங்களும், அப்பாவும் சேர்ந்து இந்த ஹோட்டலிலேயே எனக்கு கத்னா செய்துவிடுங்க போல இருக்கே! என்ன மன்னிச்சுடுங்க…. தெரியாம கேட்டுட்டேன்… நான் ஓடரேன், நான் கார்லே வெயிட்பண்றேன், நீங்க அப்பறம் வாங்க…

[காரை நோக்கி ஓடுகிறான் பாஸ்டரின் இளைய மகன், எல்லாரும் சிரிக்கிறார்கள்]

பாஸ்டர்: இந்த உரையாடல் எனக்கு ரொம்பவும் பிரயோஜனமாக இருக்கிறது. என் பையன் கேட்ட கேள்வி கூட யோசிக்கவேண்டிய விஷயம் தான் பிறகு ஒரு நாள் நாம் இதைப் பற்றி  பேசுவோம்.

உமர்: ஆமாம், நம்முடைய சபையில் உள்ள வாலிபர்களுக்கு நாம் இதைப் பற்றி சொல்லவேண்டும்.

பாஸ்டர்: நிச்சயமாக, சொல்லவேண்டும். மேலும் சகோதரிகள் கூட்டத்திலும் என் மகள் கேட்ட கேள்வி பற்றி, பாஸ்டரம்மா ஒரு சின்ன குறிப்பு சொல்லச் சொல்கிறேன்.

உமர்: நல்லது, அப்படியே செய்யுங்கள்.

என்ன ஜான்சன், ஒன்னுமே பேசாம இருக்கீங்களே!

ஜான்சன்: செவிக்கு உணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஆனால், இங்கே செவிக்கும், வயிற்றும் அருமையான உணவு பரிமாறப்பட்டு இருந்தது. எனவே, இரண்டையும் என்ஜாய் செய்துக்கிட்டு இருந்தேன்.

உமர்: ஓ.. அப்படியா! 

[பில் கட்டிவிட்டு, எல்லாரும் ஹோட்டலிலிருந்து செல்கிறார்கள். அடுத்த பாகத்தில் ஒரு கிறிஸ்தவ ஆண், வேறு மார்க்க பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாமா? முக்கியமாக இஸ்லாமிய பெண்ணை திருமணம்/காதல் திருமணம் செய்துக்கொள்ளலாமா? இல்லையா? என்பவற்றைப் பற்றி உரையாடுவோம்]

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

முலம்: http://isakoran.blogspot.in/2013/03/5.html

கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் கட்டுரைகள்