சமாதானத்தை கொண்டுவருவது எது?

(ஜிஹாதா? அல்லது மன்னிப்பா?)

What Brings Peace

ஆசிரியர்: ராபர்ட் ஸீவர்ஸ்

இந்த குழப்பமான, பிரச்சனைக்குரிய உலகத்தில் உண்மையான சமாதானத்தை பெறுவது அரிதான விஷயமாகும். நாம் அனைவரும் சமாதானத்தை விரும்புகிறோம். நாடுகளுக்கிடையே சமாதானம், குடும்பங்களில் சமாதானம், அவ்வளவு ஏன் நம் மனதிலும் சமாதானம் இருக்கவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவைகள் நம் மனதின் அமைதியை கெடுக்காமல் இருக்க பார்த்துக் கொள்ளவேண்டும். நம்மைச் சுற்றி பல தரப்பட்ட மக்கள் இருந்தாலும், பல வேற்றுமைகளுடைய மக்கள் இருந்தாலும், அவைகளை பொருட்படுத்தாமல், அம்மக்களோடு ஒற்றுமையாக வாழ்வது தான் சமாதானம் என்று கருதப்படும்.  இஸ்லாமும் கிறிஸ்தவமும் சமாதானத்தை தேடுங்கள் என்று அறிவுரை கூறுகின்றன. ஆனால், அந்த சமாதானத்தை எப்படி அடையவேண்டும் என்ற விஷயத்தில் இவ்விரு மார்க்கங்களும் நேர் எதிர் வழிமுறைகளை கையாளச் சொல்கின்றன. நாம் சமாதானம் அடைய ”இஸ்லாமும் கிறிஸ்தவமும்” எப்படிப்பட்ட வழிமுறைகளை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன என்பதை ஆய்வு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

கிறிஸ்தவத்தின் இறைவன் சமாதானத்தைப் பற்றி பல விவரங்களை கூறியுள்ளார். தம்மை பின்பற்றுபவர்களுக்கு ”சமாதானத்தை” கொடுப்பதாக இயேசு வாக்கு கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரைப் பற்றி தம்முடைய சீடர்களுக்கு இயேசு அறிவித்த பிறகு (யோவான் 14:26), அடுத்த வசனத்தில் அவர்கள் சமாதானத்தையும் பெறுவார்கள் என்றும் கூறுகிறார் (யோவான் 14:27). இதுமட்டுமல்ல, ஆவிக்குரிய கனிகளில் சமாதானமும் ஒரு கனியாகும் (கலாத்தியர் 5:22). கடைசியாக, இந்த சமாதானமானது, தேவனிடமிருந்து அவரது குமாரனாகிய இயேசுக் கிறிஸ்துவின் மூலமாக வருகிறது (அப்போஸ்தலர் நடபடிகள் 10:36). சமாதானம் என்பது தேவனிடமிருந்து வரும் தற்காலிகமான ”ஒரு அமைதி நிலை” அல்ல. அதற்கு பதிலாக, கிறிஸ்துவே நம்முடைய சமாதானமாக இருக்கிறார் (எபேசியர் 2:14). சமாதானம் என்பது நாம் முயற்சி எடுத்து நாடவேண்டியதாகும் (ரோமர் 14:19). நாம் ஒன்றுக்கும் கவலைப்படாமல், தேவனுக்கு நன்றி செலுத்தி, வேண்டுதல்களைச் செய்யவேண்டும், அப்போது தேவ சமாதானம் நம் இருதயங்களை ஆண்டுக்கொள்ளும். இதுமட்டுமல்ல, தேவன் கொடுக்கும் இந்த சமாதானம் உலகம் கொடுக்கின்ற தற்காலிக சமாதானமாக இருக்காது, இது ஒரு ஊற்று போல உள்ளத்தில் பிரவாகித்துக் கொண்டே இருக்கும். இதனை இதர மக்கள் அறிந்துக் கொள்ளமாட்டார்கள் (பிலிப்பியர் 4:6-7).

இந்த சமாதானத்திற்கு இன்னொரு பக்கமும் உள்ளது. நாம் தேவனுடன் சமாதானம் பொருந்தினால், நம் உள்ளத்தில் அவர் கொடுக்கும் உண்மை சமாதானம் நிரந்தரமாக தங்கியிருக்கும் (ரோமர் 5:1). நம்முடைய குறைகளை மன்னித்து தேவன் நம்முடன் சமாதான உடன்படிக்கை செய்தார். இதற்கு நாம் என்ன பதில் கொடுக்கப்போகிறோம்? (2 கொரிந்தியர் 5:18-19).

5:18  இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசு கிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

5:19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். (2 கொரிந்தியர் 5:18-19)

வேறு வகையாக சொல்லவேண்டுமென்றால், தேவன் நம்முடைய குறைகளை மன்னித்து நம்மோடு ஒப்புரவானார், நம்மோடு சமாதான உடன்படிக்கை செய்தார், இதே போல, நாமும் மற்றவர்களின் குறைகளை மன்னித்து அவர்களோடு சமாதானம் உடையவர்களாக மாறி ஒப்புரவாகவேண்டும் (மத்தேயு 6:14; மாற்கு 11:25). நாம் மற்றவர்களை மன்னிக்காமல் இருந்தால், நமக்கு சமாதானம் கிடைக்காது. மற்றவர்கள் மீது நமக்கு இருக்கும் கோபமும், கசப்பும், நம்முடைய மன்னிக்காத குணமும் நம்மையே அழித்துவிடும். மற்றவர்களை மன்னியுங்கள் என்று கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையானது, கடைசியில் அது அவர்களுக்கே (மன்னிப்பவர்களுக்கே) மனச்சாந்தியை கொடுக்கும். நாம் மற்றவர்களை மன்னிக்கவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்தார், ஏனென்றால், அவர் அந்த மன்னிப்பை நமக்கு முதலாவது கொடுத்துள்ளார். இதைப் பற்றி எபேசியர் 4:32 அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். (எபேசியர் 4:32)

கிறிஸ்தவத்தின்படி, சமாதானத்திற்கு அடிப்படை “மன்னிப்பு” ஆகும். இந்த சத்தியத்தை பைபிள் ஆங்காங்கே பறைசாற்றுகிறது. என் சொந்த வாழ்க்கையிலும் இதனை நான் கண்டு இருக்கிறேன், சமாதானத்தை அனுதின வாழ்வில் அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன்.

இஸ்லாமின்படி சமாதானத்தை எப்படி பெறுவது?

மன்னிப்பதின் மூலமாக சமாதானம் கிடைக்கும் என்று இஸ்லாம் போதிக்கின்றதா?

இஸ்லாம் பல வகைகளில் சமாதானம் பற்றி பேசுகின்றது. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும் போது கூறும் ”அஸ்ஸலாமு அலைக்கும்” என்ற வாழ்த்தை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வாழ்த்துதலின் பொருள் “உங்கள் மீது சமாதானம் உண்டாகட்டும்” என்பதாகும். இந்த வாழ்த்துதலைப் பற்றி முந்தைய கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 

இஸ்லாமை பொருத்தமட்டில், ஒருவரை மன்னிப்பதற்கும் அதனால் சமாதானம் உண்டாவதற்கும் இடையே உள்ள ஒற்றுமையை முழுவதுமாக புரிந்துக் கொள்ளமுடியாது. இதனை அறிய குர்-ஆனின் மிகவும் கொடுமையான வசனங்கள் என்று கருதப்படும் வசனங்களை உதாரணமாகச் சொல்லலாம். இஸ்லாம் பற்றிய அடிப்படை அறிவு உள்ளவர்கள் இந்த வசனங்களின் முதலாவது வசனத்தை நன்கு அறிந்திருப்பார்கள், ஆனால், அனேகருக்கு இதன் இரண்டாவது வசனம் அவ்வளவாக தெரிந்திருக்காது. 

குர்-ஆன் 9:14-15 வசனங்கள்:

9:14. நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

9:15. அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (டாக்டர் முஹம்மது ஜான் தமிழாக்கம்)

[9.14] Fight them, Allah will punish them by your hands and bring them to disgrace, and assist you against them and heal the hearts of a believing people.

[9.15] And remove the rage of their hearts; and Allah turns (mercifully) to whom He pleases, and Allah is Knowing, Wise.

மக்கள் அனேக முறை குர்-ஆன் 9:14ம் வசனத்தை மட்டும் மேற்கோள் காட்டுவார்கள், இதில் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களோடு போரிட கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எனினும், முஸ்லிம்கள் ஏன் போரிடவேண்டுமென்று அல்லாஹ் சொல்கிறான்? இதற்கான காரணத்தை அறிய மக்கள் குர்-ஆனில் அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. குர்-ஆன் 9:15ம் வசனத்தின் படி, முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் போரிட்டால், அதன் மூலம் அல்லாஹ் ”முஸ்லிம்களின்(முஃமின்களின்) இதயங்களுக்கு ஆறுதல் அளிப்பான்” மற்றும் “அவர்களுடைய (முஃமின்களின்) இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்”.

அல்லாஹ்வின் இந்த வாக்குறுதியை முஸ்லிம்கள் எப்படி ஜிஹாதோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்? அதாவது, ஜிஹாதின் மூலம் முஸ்லிம்களுக்கு வரும் மேற்கண்ட நன்மைகளை எப்படி முஸ்லிம்கள் இவ்வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்? இஸ்லாமியர்களால் மதிக்கப்படும் குர்-ஆன் விரிவுரையாளர் அல் மௌதூதி என்பவர் “அல்லாஹ் சொல்லும் ஜிஹாத், அனேக முஸ்லிம்களின் இருதயங்களுக்கு ஆறுதலைக் கொடுக்கும்” என்று கூறுகிறார் [1]. அதாவது முஸ்லிம்கள் அல்லாஹ்வின் ”சண்டையிடுங்கள் என்ற கட்டளைக்கு கீழ்படிந்தால்”, அதனால் அவர்களின் மனக்கவலையும், வலியும் நீங்கும் என்பதாகும். ”சண்டை” என்பது முஸ்லிம்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கும் மருந்தாகும். இஸ்லாமில், சமாதானம் என்பது சண்டையின் மூலமாக விளையும்  அருங்கனியாக இருக்கிறது. இஸ்லாமுக்கு வெளியே இருப்பவர்களிடம் சண்டையிடுவதினால், இந்த கனியை முஸ்லிம்கள் புசிக்கமுடியும், அதாவது சமாதானம் அடையமுடியும். குர்-ஆனின் படி, துக்கமடைந்த இருதயத்தின் வலியை நீக்கும் ஒரு மருந்து தான் ஜிஹாத் என்பது. மார்க் தூரி என்பவர் இதனை “மனித உள்ளத்திற்கு கொடுக்கப்பட்ட சிறப்பான மருந்து இது” என்றுச் சொல்லி ஆச்சரியப்படுகிறார்[2].

கிறிஸ்தவத்தில் சமாதானம் என்பது மன்னிப்பின் மூலமாகவும், ஒப்புரவாகுதலின் மூலமாகவும் கிடைக்கிறது. இஸ்லாமில், சமாதானம் என்பது ஜிஹாதின் மூலமாகவும், கொல்வதினாலும், சண்டையிடுவதினாலும்  கிடைக்கிறது.

இப்படி நான் எழுதுவதினால் சிலரின் மனது புண்படலாம், ஆனால் இதைத் தான் இஸ்லாமும், அதன் நூல்களும், விரிவுரைகளும் சொல்கின்றன. இதைப் பற்றி யாராவது விவாதிக்க விரும்பினால், என் தள கட்டுரையின் பின்ணூட்ட பகுதியில் தங்கள் கருத்தை பதிக்கலாம் (http://unravelingislam.com/blog/?p=470). கிறிஸ்தவ வாசகர்களிடம் நாம் கேட்டுக்கொள்வதாவது “இஸ்லாமியர்களோடு நல்ல நட்புறவை கொண்டிருங்கள், அவர்களுக்கு சுவிசேஷத்தைச் சொல்லுங்கள், அவர்களும் நம்மைப் போலவே தேவன் கொடுக்கும் உண்மையான நிரந்தரமான சமாதானத்தை பெற வேண்டிக் கொள்ளுங்கள்”.

அடிக்குறிப்புக்கள்:

[1] http://www.searchtruth.com/tafsir/tafsir.php?chapter=9

[2] http://www.frontpagemag.com/2015/mark-durie/challenging-islams-warrant-to-kill/

ஆங்கில மூலம்: http://unravelingislam.com/blog/?p=470

ராபர்ட் ஸீவர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்