நாள் 8: ஜபூர் 23 – தாவூதின் வம்சத்தில் தாவூதே பிறந்து ஒரு பிரதான மேய்ப்பராக இருப்பார் என்ற முன்னறிவிப்பு!?! இது எப்படி சாத்தியம்?

(2024 ரமளான் - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் )

ரமளான் தியான முந்தைய கட்டுரைகளை படிக்க கீழே சொடுக்கவும்.

  1. நாள் 1 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : சங்கீதம் காட்டும் சத்திய வழி
  2. நாள் 2 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் : 'தவ்ராத்'ஐ முஸ்லிம்கள் படித்து பாக்கியமுள்ளவர்களாக மாற அல்லாஹ் அழைக்கிறான்
  3. நாள் 3 - சங்கீதம் 1ல் முஹம்மது இல்லை என்பதற்கான நான்கு காரணங்கள்?
  4. நாள் 4 - ஜபூர் 22 காட்டும் இறைவழி மஸீஹாவின் மரண துன்பங்கள்
  5. நாள் 5 - ஜபூர் காட்டும் ஸிராத்தல் முஸ்தகீம் - வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட ஓர் தங்கப்பழம் ஜபூர் 23
  6. நாள் 6 - ஜபூர் 23 - அல்லாஹ் என் மேய்ப்பன் என்று சொல்வது ஷிர்க்கா?
  7. நாள் 7- ஜபூர் 23 - முந்தைய வேதகாலத்தில் மேய்ப்பனாக இருந்த அல்லாஹ், குர்‍ஆன் காலத்தில் தன் பதவியை ராஜினாமா செய்தானா?

முந்தைய கட்டுரையில் எப்படி பரிசுத்த வேதாகமத்தின் இறைவன் தன் மக்களுக்கு ஒரு நல்ல மேய்ப்பனாக இருப்பார் என்பதை பார்த்தோம். இந்த கட்டுரையில், பழைய ஏற்பாட்டில், தேவன் 'தாவூது மறுபடியும் இஸ்ரேல் மக்களுக்கு ஒரு பிரதான மேய்ப்பனாக இருந்து அவர்களை ஒரு நல்ல விதமாக‌ இருந்து மேய்ப்பார் (ஆட்சி செய்வார்)' என்று சொல்லக்கூடிய ஒரு முன்னறிவிப்பை காண்போம். இது எப்படி சாத்தியமாகும்? ஒருவர் மரித்து பல நூறு ஆடுகளுக்கு பிறகு மறுபடியும் வருவாரா?

400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவீது எப்படி மறுபடியும் மேய்ப்பனாக வருவார்?

கீழ்கண்ட வசனங்களை படித்தால், தாவீது இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு மேய்ப்பனாக வருவார் என்று தேவன் சொல்கிறார். 

தாவீதின் காலக்கட்டம் கி.மு. 10ம் நூற்றாண்டு, மற்றும் எசேக்கியேல் பாபிலோனுக்கு அடிமையாக கொண்டு போகப்பட்டது, கி.மு. 6ம் நூற்றாண்டு ஆகும். இவ்விருவருக்கும் இடையே 400 ஆண்டுகள் உள்ளது. இப்படி இருக்கும் போது, தேவன் எப்படி தாவீது ஒரு மேய்ப்பானாக வருவார் என்று சொல்கிறார்?

எசேக்கியேல் 34:23-24

23. அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார்.

24. கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.

அப்படியானால், இந்த தாவீது யார்? யூத அறிஞர்களின் படி, இந்த வசனத்தில் சொல்லப்பட்டவர், தாவீதின் வம்சாவழியில் வரப்போகிறவராக இருக்கும் மேசியா (மஸீஹா) ஆவார்.

2 சாமுவேல் 7ம் அத்தியாயத்தில், தாவீதின் சிங்காசனம் நிலைத்திருக்கும் என்று தேவன் வாக்கு கொடுத்தார், இதே விஷயத்தை 1 நாளாகமம் 17:11-14ம் வசனங்களிலும், 2 நாளாகமம் 6:16ம் வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது.

2 நாளாகமம் 6:16

16. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.

எரேமியா 33:17:

17. இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.

எரேமியா 23:5:

5. இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

ஏசாயா 9:6-7:

6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

7. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.

ஏசாயா 11:1

1. ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்.

இவர் தாவீதின் வம்சத்தில் பிறக்கும் மேசியாவாக (மஸீஹாவாக) இருக்கிறவர் இயேசுக் கிறிஸ்து.  இயேசு தாவீதின் வம்சத்தில் பிறந்த மஸீஹாவாக இருக்கிறார்

லூக்கா 1:32

32. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

இப்படி தாவீதின் வம்சத்தில் வரும் மேசியாவைத் தான், தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசி மூலமாக முன்னறிவித்தார்.  இவரே பிரதான மேய்ப்பராக இருக்கிறார். இயேசு கூட தம்மை ஒரு நல்ல மேய்ப்பனாக பிரகடனப்படுத்தினார்.

யோவான் 10:11,14,15

11. நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 14. நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15. நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

முடிவுரை:

குர்‍ஆன் இயேசுவைய் மஸீஹா என்று அடிக்கடி அழைக்கிறது. அந்த மஸீஹா தான் பிரதான மேய்ப்பராக வெளிப்படுவார் என்று பழைய ஏற்பாடும் கூறியுள்ளது.

குர்‍ஆன் 3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;

மஸீஹா பற்றி ஏன் வேதத்தில் முன்னறிவிக்கப்படவேண்டும்? அவர் எப்படி தாவீதின் சிங்காசனத்தில் என்றென்றும் உட்கார்ந்து ஆட்சி செய்வார்? அப்படியென்றால், மஸீஹா நித்தியமானவர் என்றல்லவா பொருள்படுகிறது? ஒருவர் நித்தியமானவராக இருந்தால் அவர் இறைவன் தானே!

ஆய்வு செய்து உண்மையை அறியவேண்டும் என்று ஆர்வமுள்ள முஸ்லிம்களா நீங்கள்? அப்படியென்றால், மஸீஹா பற்றிய விவரங்களை படிப்பீர்களா?

ஆர்வமுள்ளவர்கள், மஸீஹா பற்றி பைபிளும், குர்‍ஆனும் என்ன சொல்கிறது என்பதை கீழ்கண்ட கட்டுரையில் படித்துப் பார்க்கவும்

தேதி: 4th April 2024


ரமளான் 2024 கட்டுரைகள்

உமரின் பக்கம்