2013 ரமளான் நாள் 3

தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது யார்? முஹம்மதுவா? மக்காவினரா?

முந்தைய இரண்டு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படியுங்கள்:

இப்போது ரமளான் மூன்றாவது நாள் தொடர் கட்டுரையை படிப்போம். என் தம்பி எனக்கு எழுதிய பதிலை முதலாவது படியுங்கள். அதன் பிறகு என் பதில் கடிதத்தை படியுங்கள்.

உமரின் தம்பியின் வாதம்: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது மக்காவினர் தான்!

அன்புள்ள அண்ணாவிற்கு,

உங்கள் அருமை தம்பி எழுதும் கடிதம்.

உங்களது இரண்டாவது கடிதம் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். இஸ்லாமிய புத்தகங்கள் எங்கு இருந்தாலும், அவைகளைத்  தேடி கண்டுபடித்து நீங்கள் படிக்கிறீர்கள் என்பதை மட்டும் தெளிவாக உணர்ந்துக்கொண்டேன்.  

நீங்கள் அறிமுகம் செய்த "ரஹீக்" புத்தகத்திற்காக மிக்க நன்றி. இதுவரை அதனை நான் படிக்காதது வேதனைக்குரிய விஷயம் தான்.  சரி, விஷயத்திற்கு வருகிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்று நிகழ்ச்சிகள் நடந்தவைகள் தான். ஆனால், அவைகளுக்கு நீங்கள் பூசிய முலாம் தான் சரியில்லை.   இப்போது நான் அதனை உங்களுக்கு விளக்குகிறேன்.

ஏன் இறைத்தூதர், குறைஷிகளின்(மக்காவினரின்) வியாபாரிகளை தாக்கி அவர்களிடமிருந்து செல்வங்களை கைப்பற்றினார்:

1) மக்காவில் இருக்கும் போது எங்கள் இறைத்தூதர், அமைதியாக  இறைச்செய்தியை பிரசங்கித்தார்.

2) மக்காவினரின் எதிர்ப்புகளை, கொடுமைகளை சமாளித்துக்கொண்டு வாழ்ந்தார், அதே போல, இதர முஸ்லிம்களும் சகித்துக்கொண்டு இருந்தார்கள். மக்காவினரின் தொல்லைகளுக்கு எல்லை இல்லாமல் போனது.

3) மக்காவினர் வன்முறையில் ஈடுபட்டு, கொலை செய்யும் அளவிற்கு சென்ற போது, அவரும் இதர முஸ்லிம்களும் தங்கள் வீடுகளை விட்டு, மற்ற பொருட்களை விட்டுவிட்டு,  ஒன்றுமில்லாத நிலையில் மதினாவிற்கு சென்றார்கள்.

4) தங்கள் செல்வங்களை மக்காவில் விட்டுவிட்டு, மதினாவில் தஞ்சம் புகுந்தார்கள், தங்கள் நாட்களை வறுமையிலும், துக்கத்திலும் கடத்தினார்கள்.

5) முஸ்லிம்களின் செல்வங்களை அபகரித்துக்கொண்டு, அவர்களை கொடுமைப்படுத்தியதினால்,  மக்காவினரிடமிருந்து தங்களது செல்வங்களை மீட்டுக்கொள்ள அல்லாஹ் அனுமதி அளித்தான்.

6) மக்காவினரோடு முஸ்லிம்கள் சண்டையிடுவதற்கு காரணம் அந்த மக்காவினரே, அவர்கள் தான் முதன் முதலாக முஸ்லிம்களை கொடுமைப்படுத்த ஆரம்பித்தார்கள், கொலை செய்ய முயற்சித்தார்கள். எனவே தான் அல்லாஹ் இறைத்தூதருக்கு இவைகளைச் செய்யஅனுமதி அளித்தார்.

மேற்கண்ட விவரங்களை சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்,  இரண்டு விஷயங்களாக கூறலாம். 

முதலாவதாக, அமைதியாக இருந்த இறைத்தூதர் மீதும், முஸ்லிம்களின் மீதும் வன்முறையை தூண்டி, அவர்களை கொடுமைப்படுத்தியது,  கோபப்படுத்தியது மக்காவினர்.  அதாவது, அமைதியாக இருக்கும் தேன் கூட்டின் மீது கல்லெறிந்தது அந்த மக்காவினர்,  அதன் பிறகு தேனீக்கள் எங்களை விரட்டி விரட்டி கடிக்கின்றதே என்று அவர்கள் ஒப்பாறி வைத்தால் எப்படி நியாயமாகும்? தேன் கூட்டின் மீது ஏன் முதலாவது கல்லெறியவேண்டும், அதன் பிறகு தேனீக்கள் எங்களை கடிக்கின்றன என்று ஏன் கவலைப்படவேண்டும்?

 இரணடாவதாக,  முஸ்லிம்கள் மக்காவில் விட்டுவந்த செல்வங்களை மீட்டுக்கொள்ள அல்லாஹ் முஸ்லிம்களுக்கு போர் புரிய அனுமதி அளித்தான். 

மதினாவிற்கு சென்ற பிறகு ஏன் இறைத்தூதர் போர் புரிந்தார் என்பதை இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இதற்கு மேலும் இந்த நிகழ்ச்சிகளை காரணம் காட்டி  எங்கள் இறைத்தூதர் மீது  உங்களால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கமுடியாது என்று நம்புகிறேன்.  

என் அருமை அண்ணே, இந்த அடி (விவரம்) போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

இப்படிக்கு, 

உங்கள் பதிலுக்காக காத்திருக்கும், 

உங்கள் தம்பி


[என் தம்பியுடைய மேற்கண்ட கடிதத்திற்கு, நான் எழுதிய பதில் கடிதத்தை இப்போது படியுங்கள்]

உமரின் வாதம்: தேன் கூட்டில் கல்லெறிந்து தேனீக்களை கோபமூட்டியது முஹம்மது தான்!

அன்புள்ள தம்பிக்கு,

அண்ணன் உமரின் வாழ்த்துதல்கள். 

உன் விவாதங்களில் கொஞ்சம் சூடு (விஷயங்கள்) அதிகமாகிக்கொண்டு இருக்கிறதை என்னால் காணமுடிகின்றது.  இதற்காக என் வாழ்த்துதல்களை மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன்.  என் முந்தைய கடிதத்தில் நான் மேற்கோள் காட்டிய 3 வழிப்பறி கொள்ளைகள் பற்றி உன்னால் பதில் சொல்லமுடியாது என்று நான் நினைத்தேன், ஆனால், ஒரு முஸ்லிமுக்கே இருக்கும் தனிச்சிறப்போடு நீ  பதில் சொன்னது என்னை சிறிது நேரம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

இஸ்லாமிய புத்தகங்களை எதிராளி படித்து இருக்கமாட்டான் என்ற நினைப்போடு பேசுவதும், எழுதுவதும் முஸ்லிம்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. அதே நிலையில் இருந்துக்கொண்டு நீயும் என்னிடம் சவால் விட்டாய். உங்களால் ஆதாரங்களை தரமுடியாது என்று சிங்கம் போல கர்ஜித்தாய். ஆனால், நான் ஒரு விஷயத்தை  வேண்டுமென்றே சொல்லாமல் இருந்தால், அதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கும் என்பதை நீ அறியாமல் இருந்தாய்.  நீ இனியாவது என்னை சரியாக புரிந்துக்கொள்.  

இப்போது, உன் கடிதத்தில் நீ முன்வைத்த விவரங்களை சிறிது ஆராய்வோம், நீ சொன்னவைகளில் உண்மை இருக்கின்றதா என்பதை உரசிப் பார்ப்போம்.

நீ இரண்டு விவரங்களை முன்வைத்தாய், 1) முதன் முதலாக தேன் கூட்டின் மீது கெல்லெறிந்தது மக்காவினர் தான் என்று நீ சொன்னாய். 2) முஸ்லிம்கள் விட்டுவந்த செல்வங்களை மறுபடியும் மீட்டுக்கொள்ளவே, மக்காவினரின் வியாபாரிகளை முஸ்லிம்கள் தாக்கினார்கள் என்று  கூறினாய். 

நீ முதலாவது கூறிய விஷயத்தைப் பற்றி இப்போது  நான் உனக்கு எழுதுகிறேன்.

தேன் கூட்டின் மீது கல்லெறிந்தது முஹம்மது தான்

மக்காவினர்தான் முஹம்மதுவையும், முஸ்லிம்களையும் முதலாவது தொந்தரவு செய்தார்கள் என்பது உண்மையல்ல. முதலாவது முஹம்மது தான் சும்மா இருந்த மக்காவினர் மீது கல்லெறிந்தார், அவர்களை தொந்தரவு செய்தார், அதன் பிறகு தான் அவர்கள் இவருக்கு பிரச்சனை கொடுக்க ஆரம்பித்தார்கள். இதனை நான் சொல்லவில்லை, இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன. இப்போது அவைகளை பார்ப்போம்.

முஹம்மதுவின் ஆரம்பகால  பிரச்சாரம் பற்றி அல்-தபரி தன்னுடைய சரித்திர நூலில் கீழ்கண்ட விவரங்களை கொடுக்கிறார்:

அ)  முஹம்மது தம்முடைய ஜனங்களுக்கு இறைச்செய்தியை வெளிப்படையாக அறிவித்தார்.  இப்படி அவர் அறிவிக்கும் போது, மக்காவினர் இவரை எதிர்க்க வில்லை. ஆனால், முஹம்மது அவர்களது தெய்வங்களை விமர்சித்து,  மதிப்பு குறைவாக பேசும் போது மக்காவினர் இவரை எதிர்க்க ஆரம்பித்தார்கள்.

ஆ) முஹம்மது இப்படி குறைஷிகளின் தெய்வங்களை விமர்சிக்கும் போது, அவர்கள் நேரடியாக முஹம்மதுவின் தந்தையின் சகோதரர் அபூ தலிப் அவர்களிடம் வந்து கீழ்கண்டவாறு முறையிட்டார்கள். 

"அபூ தலிப் உங்கள் சொந்தக்காரர் [முஹம்மது] எங்கள் தெய்வங்கள் பற்றி தவறாக பேசுகிறார், நம் மதத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். நம்முடைய கலாச்சாரத்தை ஏளனம் செய்கிறார் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்கிறார். அவர் எங்கள் மீதான தன் குற்றச்சாட்டுக்களை நிறுத்திக்கொள்ளும்படி செய்யும்,அல்லது நாங்கள் அவருக்கு தகுந்த பதில் அளிக்க (ஒரு கை பார்க்கும் படி) எங்களுக்கு அனுமதி அளியும். நாங்கள் எப்படி அவருக்கு எதிராக இருக்கிறோமோ, அதே போல நீரும் இருக்கிறீர், உங்களுக்காக வேண்டுமானால் நாங்கள் அவரை பார்த்துக்கொள்கிறோம். Tabari, vol 6, pages 93, 94.

இ) ஆனால், அபூ தலிப் அவர்களோ,  முஹம்மதுவை ஆதரித்து பாதுகாத்து வந்தார்கள்.

ஈ)  தங்களுக்கு நீதி கிடைக்காததால், குறைஷிகள், அபூ தலிப் மரிக்கும் வரை காத்திருந்தார்கள்.

உ) அவர் மரித்ததும், தங்கள் தெய்வங்களை கேவலப்படுத்திய முஹம்மதுவை கொலை செய்ய முயற்சி எடுத்தார்கள். இதிலிருந்து தப்பித்து அவர் மதினாவிற்கு இடம்பெயர்ந்தார்.  (பார்க்க http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm & http://www.answering-islam.org/tamil/christians/lom_seminar3.html)

முஹம்மதுவிற்கு குறைஷிகள் செய்தது தவறு ஆகும் மேலும் அது அநீதியாகும் என்று நீ சொல்லலாம். அப்படியானால், கீழ்கண்ட விவரங்களை படித்து அதையும் தவறு என்றும், அநீதி என்றும் உன்னால் சொல்லமுடியுமா?

இன்று மக்காவில் ஒரு புதிய நபி எழும்பினால், இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்?

மக்கா என்பது முஸ்லிம்களின் புனிதஸ்தலம் என்று உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். இந்த காலகட்டத்தில், மக்கா நகரில் பிறந்த ஒருவர், திடீரென்று ஒரு நாள், காபாவின் அருகில் வந்து, கீழ்கண்ட விதமாக கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்:

அ) நான் ஒரு நபியாக இருக்கிறேன்.

ஆ) முஸ்லிம்களாகிய நீங்கள் பின்பற்றும்  தொழுகை முறைகள், ஹஜ் சட்டங்கள் அனைத்தும் தவறானவது. இவைகளை பின் பற்றினால் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்.

இ) அல்லாஹ் என்னை நபியாக ஆக்கியுள்ளான். நீங்கள் பின்பற்றும் அனைத்தையும் மாற்றும் படி எனக்கு அறிவித்து உள்ளான். முஹம்மது சொன்னது அனைத்தும் பொய்யானவைகளாகும். அவைகளை பின் பற்றினால் நரகம் நிச்சயம். 

ஈ) எனவே,  என்னை பின் பற்றுங்கள், நான் உங்களுக்கு நேரான வழியை காட்டுவேன்.

மேற்கண்ட விதமாக  ஒருவர் மக்காவில் இன்று பிரச்சாரம் செய்தால், அவனை முஸ்லிம்களாகிய நீங்கள் என்ன செய்வீர்கள். மேலும் இந்த மனிதர், ஒரு நல்லவராக  நீதியுள்ளவராக இதுவரை வாழ்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம்.   இதர மக்கள் சொல்வதை எதையும் கேட்காமல், தான் சொன்னது தான் உண்மை என்று இவர் வாதிக்கிறார், மேலும், இவரது இறைச்செய்தியைக் கேட்டு சிலர் இவரை நபி என்று நம்பி, இவரை பின் பற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். 

இப்போது இவரைப் பற்றி மக்கா முஸ்லிம்கள் என்ன செய்வார்கள்?  என்னைக் கேட்டால், இவர் கூடிய சீக்கிரமே முஸ்லிம்களால் கொல்லப்படுவார் என்றுச் சொல்வேன். தம்பி, இது தானே உன்னுடைய பதிலாகவும் இருக்கும்.

இப்போதுச் சொல், இவருக்கு முஸ்லிம்கள் செய்வது தவறு இல்லையா? அநீதி இல்லையா?  

அன்று குறைஷிகள், இன்று முஸ்லிம்கள்:

இன்று இவருக்கு முஸ்லிம்கள் என்ன செய்வார்களோ, அதே செயலை அன்று குறைஷிகள் முஹம்மதுவிற்கு செய்ய முடிவு செய்தார்கள்.  இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்று தான்.   அன்று முஹம்மது, இன்று இந்த புதிய நபி. அன்று குறைஷிகள், இன்று முஸ்லிம்கள். அன்று குறைஷிகளின் புனித ஸ்தலம், இன்று முஸ்லிம்களின் புனித ஸ்தலம்.

தம்பி, முதலாவது குறைஷிகளை தன் வார்த்தைகளால் தாக்கியது முஹம்மது. அவர்களின் தெய்வங்களை கேவலப்படுத்தியது முஹம்மது. அவர்களின் மனதிற்கு துக்கத்தைக் கொடுத்தது முஹம்மது.  முஹம்மது சொன்னது உண்மையோ, பொய்யோ அதுவல்ல பிரச்சனை,  மக்களின் நம்பிக்கையை தாக்கி நாம் பேசும் போது, எதிர்ப்புக்கள் வரத்தான் செய்யும். பல நூற்றாண்டுகளாக உண்மை என்று நம்பிக்கொண்டு வாழும் மக்களிடம் வந்து, உன் மூதாதையர்கள் செய்தது எல்லாம் வீண், அவைகளால் உங்களுக்கு நன்மையில்லை என்றுச் சொன்னால், எந்த  மனுஷன் தான் சும்மா இருப்பான்?  இப்படி எதிர்ப்பு வேண்டாமென்று விரும்புகிறவர்கள், வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்கவேண்டும். 

ஆக, முஹம்மதுவின் விஷயத்திற்கு வந்தால், தேன் கூட்டின் மீது முதலாவது கல்லெறிந்து அதை கலைத்தது முஹம்மது ஆவார்.  மக்காவினர் அனேக வழிமுறைகள் மூலமாக முஹம்மதுவோடு சமாதானம் செய்துக்கொள்ளலாம் என்று விரும்பினார்கள், அபூ தலிப் அவர்களிடம் முறையிட்டார்கள், ஆனால், நன்மை ஒன்றும் ஏற்படவில்லை, முஹம்மது, அவர்களின் தெய்வங்களை தாக்கி பேசுவதை நிறுத்திக்கொள்ளவில்லை. எனவே, இன்று முஸ்லிம் செய்யும்  வேலையை அன்று குறைஷிகள் செய்தார்கள். இன்றுள்ள முஸ்லிம்களும், அன்று இருந்த குறைஷிகளும் ஒரே படகில் தான் பிரயாணப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். 

எனவே, முஹம்மதுவின் செயல்கள் தான், குறைஷிகளை வன்முறையில் ஈடுபடவைத்தது. எனவே, இங்கு குற்றவாளி முஹம்மது தானே தவிர  குறைஷிகள் அல்ல. 

தம்பி, உன்னுடைய முதலாவது கேள்விக்கு நான் பதில் சொல்லியுள்ளேன். உன் இரண்டாவது கேள்விக்கு அடுத்தமுறை பதில் எழுதுகிறேன். அதாவது முஹம்மது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது, தான் விட்டுவந்த செல்வங்களை மீட்டுக்கொள்ளவே என்ற உன் விளக்கத்திற்கு பதிலை அடுத்த கடிதத்தில் எழுதுகிறேன்.

இந்த கடிதத்திற்கு நீ பதில்களை எழுதுவாய் என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு,

உன் அண்ணன்

உமர்

மூலம்

உமரின் ரமளான் மாத கட்டுரைகள்